ஜெ.க்கு தமிழக விடுதலைப் படையினர் இ-மெயில் மூலம் கொலை மிரட்டல்
சென்னை:
முன்னாள் தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவுக்கு தமிழக விடுதலைப் படைஅமைப்பினர் இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
வழக்கு விசாரணைக்காக ஜெயலலிதா நீதிமன்றத்துக்கு வரும்போது அவரைக் கொலை செய்வோம் என்றுஅவ்வமைப்பினர் கூறியுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள பல பத்திரிக்கை அலுவலகங்களுக்கு வந்த அந்த இ-மெயில் கடிதத்தில் தமிழக விடுதலைப்படையினர் கூறியிருப்பதாவது:
கடந்த 54 ஆண்டுகளாக இந்தியக் கொள்கைகள் காரணமாக தமிழகம் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.இந்தியாவின் இந்த மேலாதிக்கம் வெளியேற்றப்பட வேண்டும்.
சர்வதேச மேலாதிக்கம் காரணமாகத் தமிழகத்தில் தோன்றியுள்ள பன்னாட்டு நிறுவனங்கள் அனைத்தும் தங்கள்அலுவலகங்களைக் காலி செய்துவிட்டு, தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும்.
தமிழகத்தில் பொருளாதாரத்தைச் சீர்குலைத்த சில அரசியல்வாதிகளைக் களையெடுக்க உள்ளோம். முதல் கட்டமாகஜெயலலிதாவைக் கொலை செய்ய எங்கள் தலைமை கட்டளையிட்டுள்ளது.
வழக்கு விசாரணைக்காக அவர் நீதிமன்றத்துக்கு வரும்போது அவரை நாங்கள் கொலை செய்வோம்.
தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் நிறுத்தப்பட்டுள்ள இந்திய ராணுவத்தினரும் உடனடியாக வெளியேறவேண்டும். இல்லையென்றால் எதிர் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.
தமிழகத்துக்கு விடுதலை கேட்பது எங்களது தேச உரிமை ஆகும். அதற்கு எங்களுக்கு அதிகாரமும் உண்டு என்றுஅக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இக்கடிதம் குறித்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன் கூறியதாவது:
இந்த மிரட்டலை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. மிரட்டல் கடிதத்தை அனுப்பியுள்ள தமிழக விடுதலைப்படையின் கடந்த கால நடவடிக்கைகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
எங்கிருந்து இந்த இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளது என்பதைக் கண்டுபிடித்துவிட்டோம். இக்கடிதம்அனுப்பியவர்களைப் பிடிப்பதற்காக தனிப் போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது என்றார் முத்துக்கருப்பன்.