மீண்டும் நேபாளத்தில் வெடித்த Gen Z போராட்டம்.. ‘2கே’ கிட்ஸால் பிரதமரான பாலன் ஷா பதவி விலகல்?
காத்மாண்டு: நேபாளத்தில் கடந்த ஆண்டு அரசுக்கு எதிராக வெடித்த ஜென் - ஸி இளைஞர் போராட்டத்தை தொடர்ந்து பிரதமரானார் 'ராப்' பாடகர் பாலன் ஷா. இந்நிலையில் தான் அவரை பிரதமராக்கிய ஜென் - ஸி இளைஞர்கள் தற்போது அவருக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் அவர் பதவி விலக கோரிக்கை வலுத்துள்ள நிலையில் மீண்டும் நேபாளத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
நேபாளத்தின் பிரதமராக இருந்தவர் கேபி ஷர்மா ஒலி. இவர் கடந்த 2025 செப்டம்பர் மாதம் 12ம் தேதி வரை பிரதமராக இருந்தார். இந்நிலையில் தான் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் ஊழலுக்கு எதிராக Gen - Z இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். இது வன்முறையானது. இதையடுத்து கேபி ஷர்மா ஒலி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

அதன்பிறகு இடைக்கால பிரதமராக கடந்த 2025 செப்டம்பர் 12ம் தேதி முதல் 2026 மார்ச் மாதம் 27 ம் தேதி வரை சுஷிலா கார்கி பொறுப்பு வகித்தார். அதன்பிறகு நடந்த பொதுத்தேர்தலில் தேசிய சுதந்திர கட்சி அமோக வெற்றி பெற்றது. இந்த கட்சியின் தலைவரான 'ராப்' பாடகர் பாலன் ஷா பிரதமரானார்.
நேபாள முன்னாள் பிரதமர் கேபி ஷர்மா ஒலி அரசுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஜென் - ஸி இளைஞர்களை போராட வைத்த பாலன் ஷா வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார். இது பலருக்கும் ஆச்சரியமளித்தது. இந்நிலையில் தான் தற்போது பாலன் ஷாவிற்கு எதிராக மீண்டும் Gen - Z போராட்டம் வெடித்துள்ளது. அதாவது கடந்த 9 ம் தேதி தலைநகர் காத்மாண்டுவில் கணேஷ் நேபாளி என்ற வாடகை வாகன டிரைவர் தீக்குளித்து இறந்தார். 'நோ பார்க்கிங்' பகுதியில் அவர் வாகனத்தை நிறுத்தியதால் போலீசாருக்கும், அவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் மனம் நொந்து தீக்குளித்து தற்கொலை செய்தார்.
இதனால் கோபமான ஜென் - ஸி இளைஞர்கள் பாலன் ஷாவிற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் ஆதரவு வழங்கி உள்ளனர். பாலன் ஷா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சியினரும், போராட்டக்காரர்களும் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். இது பாலன் ஷாவிற்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் பாலன் ஷா தற்போது வரை ராஜினாமா குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் தொடர்ந்து போராட்டம் நடந்து வருவதால் அவர் பிரச்சனையை எதிர்கொண்டுள்ளார்.
மேலும் பாலன் ஷா பிரதமரான பிறகு அவருக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடுவது இது முதல் முறையல்ல. கடந்த மாதம் நேபாள நாடாளுமன்றத்தில் பாலன் ஷா பேசுகையில், ''இந்திய பகுதிகளை பல இடங்களில் நேபாளமும் ஆக்கிரமித்துள்ளது'' என்று கூறினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. நேபாளத்தை சேர்ந்த பல மாணவ அமைப்பினர் போராட்டத்தை மேற்கொண்டனர்.
பாலன் ஷாவின் இத்தகைய பேச்சு இந்தியா - நேபாளம் இடையேயான நல்லுறவை சீர்க்குலைக்கும் என்று எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்தனர். தற்போது 2 முறையாக அவருக்கு எதிராக நேபாளத்தில் போராட்டம் வலுத்துள்ளது. இதனால் பாலன் ஷா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்கிறாரா? இல்லையா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.














Click it and Unblock the Notifications