பான் மசாலா, குட்கா விற்றால் 6 மாதம் சிறை; 1000 ரூபாய் அபராதம்
சென்னை:
தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா ஆகியவற்றைக் கடைகளில் விற்பனை செய்பவர்களுக்குஆறு மாதம் சிறை தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் செம்மலை வெளியிட்டுள்ள அறிக்கை:
நம் நாட்டில் புற்று நோயால் பாதிக்கப்படுபவர்களில் மூன்றில் ஒரு பாகத்தினர் பான் மசாலாவைப்பயன்படுத்தியவர்கள் ஆவர்.
புகையிலை சேர்க்கப்பட்ட பான் மசாலாவை ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் வரை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால்வாயைத் திறக்க முடியாத நிலைக்குப் படிப்படியாகச் சென்று விடுவார்கள் என்று ஹைதராபாத் தேசிய ஊட்டச்சத்துஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.
எனவே பொதுமக்களின் உடல்நலத்தை, குறிப்பாக, இப்பழக்கத்துக்கு ஆளாகியுள்ள இளைஞர்களின் உடல்நலத்தைப் பாதுகாக்கும் பொருட்டு அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
புகையிலை மற்றும் புகையிலை சேர்க்கப்பட்ட பான் மசாலா, குட்கா ஆகியவை எந்தப் பெயரில்விநியோகிக்கப்பட்டாலும் அவற்றைச் சேகரித்து வைத்தாலும் அது சட்டப்படி குற்றமாகும்.
இத்தடையை மீறுபவர்களுக்கு ஆறு மாதம் சிறைத் தண்டனை வழங்கப்படும். மேலும் ரூ.1000 அபராதம்விதிக்கப்படும் என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளார் அமைச்சர்.