ஊமை மாணவியை கற்பழித்தவருக்கு 7 ஆண்டு கடுங்காவல்
சென்னை:
ஊமை மாணவியை கற்பழித்த நபருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் பூவந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் பிறவி ஊமை, காதும் கேட்காது. மதுரையில் உள்ள வாய் பேச முடியாதோர், காது கேளாதோர் பள்ளியில் ராஜேஸ்வரி படித்து வந்தார்.
இந்த நிலையில் பூவந்தியைச் சேர்ந்த குமார் என்ற வாலிபர் கடந்த 1995ம் ஆண்டு ராஜேஸ்வரி தனியாக இருந்தபோது அவரை தனியிடத்திற்கு அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக கற்பழித்தார்.
அப்போது அந்த வழியாக சிலர் வந்ததைப் பார்த்ததும் ராஜேஸ்வரியை விட்டு விட்டு தப்பினார். ராஜேஸ்வரியை மீட்ட கிராமத்தினர் அவரை பத்திரமாக வீட்டில் சேர்த்தனர்.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சியுற்ற ராஜேஸ்வரி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். ஆனால் தீவிர சிகிச்சைக்குப் பிறகு உயிர் பிழைத்தார்.
ராஜேஸ்வரியை மிருகத்தனமாக கற்பழித்த குமார் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். சிவகங்கை உதவி செஷன்ஸ் நீதிமன்றத்தில் குமாருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் இதை உறுதி செய்தது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் குமார் அப்பீல் செய்தார்.
இந்த அப்பீல் மனுவை விசாரித்த நீதிபதி பாக்கியராஜ், மனைவியாக இல்லாத ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வது கற்பழிப்புக்குச் சமம். ஆனால் ராஜேஸ்வரியோ வாய் பேச முடியாத, காது கேட்காத பெண் என்று தெரிந்திருந்தும் இரக்கமேயில்லாமல் குமார் அவரைக் கற்பழித்துள்ளார்.
எனவே இது மன்னிக்க முடியாத குற்றமாகும். அவருக்கு கீழ்க் கோர்ட்டில் விதிக்கப்பட்ட 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை சரியானதே என்று கூறி தீர்ப்பை உறுதி செய்தார்.