நெல்லையப்பர் கோவில் உண்டியல் கொள்ளை
திருநெல்வேலி:
திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோவிலுக்குள் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை புகுந்துஉண்டியல்களை உடைத்து பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற 4 மர்ம மனிதர்களைப் போலீசார் தேடிவருகின்றனர்.
திருநெல்வேலியில் உள்ளது புகழ்பெற்ற நெல்லையப்பர் கோவில். அங்கு இன்று அதிகாலை 4 மணிக்கு 4 மர்மமனிதர்கள் புகுந்தனர்.
கோவிலில் இருந்த 2 உண்டியல்களை உடைத்து, அவற்றிலிருந்த சில்லரைகளையும் பணத்தையும் அள்ளிக்கொண்டு ஓடினர்.
உண்டியல்களை உடைப்பதற்காக ஒரு வெல்டிங் மெஷினையும் அவர்கள் கொண்டு வந்திருந்தனர்.
சத்தம் கேட்டு ஓடிவந்த கோவில் காவலாளிகள், கொள்ளையர்களைத் துரத்தினர். ஆனால் அவர்களையும் மீறிகொள்ளைக்காரர்கள், திருடிய தொகையிலிருந்து சிறிது சில்லரைகளை மட்டும் போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
தப்பி ஓடிய 4 பேரையும் பிடிக்கும் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
திருநெல்வேலியைச் சுற்றிலும் சமீப காலத்தில் அடிக்கடி பெரிய அளவிலான கொள்ளைச் சம்பவங்கள் நடந்துவருவதால், நெல்லை மாநகரம் கொள்ளை மாநகரமாக மாறி வருகிறது.