ஆண்டிப்பட்டியில் போய் பணத்தைக் கொட்டுவதா?அதிமுகவுக்கு வைகோ கண்டனம்
திருச்சி:
தங்கள் தொகுதியின் வளர்ச்சிக்காக அரசு ஒதுக்கிய நிதியை அதிமுக எம்.பிக்களும், எம்.எல்.ஏக்களும் இடைத்தேர்தல் நடக்கவுள்ள 3 தொகுதிகளுக்கும் ஒதுக்கி வருவதை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டித்துள்ளார்.
அடுத்த மாதம் இடைத் தேர்தல் நடக்கவுள்ள ஆண்டிப்பட்டி, வாணியம்பாடி, சைதாப்பேட்டை தொகுதிகளின்வளர்ச்சிப் பணிகளுக்காக அதிமுக எம்.பிக்களும், எம்.எல்.ஏக்களும் தங்கள் தொகுதிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளநிதியைத் தந்து வருகினறனர்.
இந்த 3 தொகுதிகளையும் கைப்பற்றுவதற்காக பல்வேறு முயற்சிகளில் அதிமுக அரசு ஈடுபட்டுள்ளது. ஆனால்,கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள தமிழக அரசிடம் இந்தத் தொகுதிகளுக்காக செலவழிக்க பணம் இல்லை.
இதனால், தங்கள் தொகுதி வளர்ச்சி நிதியை இந்த 3 தொகுதிகளுக்கும் திருப்பி விடுமாறு எம்.பி,எம்.எல்.ஏக்களுக்குக் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து ஜெயலலிதா போட்டியிடவுள்ள ஆண்டிப்பட்டி தொகுதிக்கு செலவு செய்வதில் அதிமுக எம்.பி.,எம்.எல்.ஏக்கள் இடையே பெரும் போட்டியே ஏற்பட்டுள்ளது.
இதற்கு வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
ஒவ்வொரு எம்.பியும், எம்.எல்.ஏவும் தனக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி வளர்ச்சி நிதியை தங்கள் தொகுதிமக்களுக்காகத் தான் செலவு செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு கோடிக்கணக்கான பணத்தை இந்த 3 சிறியதொகுதிகளிலும் செலவழித்துவிட்டு பிற தொகுதிகளை நட்டாற்றில் விடுவது ஜனநாயகம் அல்ல.
இது தேர்தல் கமிஷனின் விதிமுறைகளுக்கும் எதிரானதாகும்.
இந்த 3 தொகுதிகளும் மதிமுக தனியே தான் போட்டியிடும். இதில் எந்த மாற்றமும் இல்லை.
அதிமுக கூட்டணியில் இருந்து பல கட்சிகளும் விலகி வருவது அந்தக் கட்சி தனிமைப்படுத்தப்பட்டு வருவதைத்தான் காட்டுகிறது.
கம்யூனிஸ்ட் கட்சிகளும் விலகிவிட்டால் அதிமுக பலவீனமடைந்துவிடும்.
இந்த இடைத் தேர்தலால் பெரிய அளவில் அரசியல் மாற்றம் எதுவும் தமிழகத்தில் ஏற்பட்டுவிடாது.
ஆட்சியில் இருக்கும் அரசுகள் இடைத் தேர்தல்களில் முறைகேடு செய்வது வழக்கமாகப் போய்விட்டது.
இவ்வாறு வைகோ கூறினார்.












Click it and Unblock the Notifications