சட்ட மாணவர்கள் மீது போலீசார் தாக்குதலை விசாரித்த நீதிபதி திடீர் மரணம்
சென்னை:
சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியது குறித்து விசாரணை நடத்தி வந்த ஓய்வு பெற்றநீதிபதி எஸ்.எம். அலி முகமது திடீரென்று மாரடைப்பால் காலமானார்.
கடந்த 1993 முதல் 1997 வரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த அலி முகமதுவின் வயது 66.அவருக்கு மனைவி, 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
நேற்று (புதன்கிழமை) இரவு அவருக்குத் திடீரென்று மாரடைப்பு வந்து இறந்ததாக நீதிபதி அலி முகமதுவின்குடும்பத்தினர் தெரிவித்தனர்.
சமீபத்தில் சட்டக் கல்லூரி விடுதிக்குள் புகுந்து அங்குள்ள மாணவர்களைப் போலீசார் தாக்கியதில் 50க்கும்மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக ஒரு நபர் கமிஷன் விசாரணைக்குத் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. நீதிபதி அலிமுகமதுதான் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பான அறிக்கையை இன்னும் சமர்ப்பிக்காத நிலையிலேயே நீதிபதி அலி முகமது திடீரென்றுஇறந்து விட்டார்.
அவருடைய இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறுகின்றன.