இந்தியா வந்தது முதல் ஆப்கானிஸ்தான் விமானம்
டெல்லி:
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தி வைத்திருந்த ஆப்கானிஸ்தானின் ஏரியான் நிறுவனத்தின் விமானச் சேவைமீண்டும் தொடங்கியது. முதல் விமானம் இன்று (வியாழக்கிழமை) டெல்லி வந்து சேர்ந்தது.
ஆப்கானிஸ்தானின் விமானப் போக்குவரத்து அமைச்சர் அப்துல் ரஹ்மானும், ஏரியானா விமான நிறுவனத்தலைவர் ருஹுலுல்லா அமானும் இந்த விமானத்திலேயே டெல்லி வந்தனர்.
இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஷானவாஸ் ஹுசைன், ஆப்கானிஸ்தானுக்கான இந்தியாவின் சிறப்புத்தூதர் எஸ்.கே. லம்பா மற்றும் பல அதிகாரிகள் விமானத்தில் வந்தவர்களை அன்புடன் வரவேற்றனர்.
இந்தியாவுடன் மீண்டும் இந்த விமானச் சேவை தொடங்கியிருப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். வாரம்ஒரு முறை காபூலிலிருந்து டெல்லிக்கு இந்த விமானம் வரும் என்று ரஹ்மான் கூறினார்.
ஆப்கானிஸ்தானில் 1996ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய உடனேயே அந்நாட்டுடனான விமானப்போக்குவரத்தை இந்தியா துண்டித்துக் கொண்டது.