நெல்லையில் கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை
திருநெல்வேலி:
முன்விரோதம் காரணமாக கல்லூரி மாணவரை சக மாணவர்களே அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர்.
திருநெல்வேலி பேட்டையில் உள்ள ஹிந்துக்கள் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு பொருளாதாரம் படித்துவந்தவர் சிவராமன் (20). இவர் பேட்டையை அடுத்துள்ள சங்கன்திரடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்.
கல்லூரி அருகே இருக்கும் சுத்தமல்லி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் முருகன். இவரும் அதேகல்லூரியில்தான் படித்து வந்தார்.
நேற்று (புதன்கிழமை) காலை 9.30க்கு பஸ்ஸில் வந்த இவர்கள் இருவரும் கல்லூரி வாசல் அருகே சென்றபோது,அதே கல்லூரியில் படிக்கும் துரைமுருகன் என்ற மாணவன் தலைமையிலான ஆறு பேர் கொண்ட மாணவர் கும்பல்இவர்களை வழிமறித்து அரிவாள் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் தாக்கினர்.
இதில் சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிவராமனும், செந்தில்முருகனும் தப்பி ஓடினர். ஆனால் அந்தகும்பல் ஒரு கி.மீ. தூரம் வரை அவர்களைத் துரத்திச் சென்று வெட்டியது.
செந்தில் முருகன் பலத்த காயங்களுடன் பாளையங்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தக் கொலை தொடர்பாக அதே கல்லூரியில் மூன்றாம் ஆண்டு உடற்கல்வி பிரிவில் படித்து வரும் துரைமுருகன்,பழனிகுமார் உட்பட ஆறு மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கொல்லப்பட்ட சிவராமனுக்கும் தேடப்பட்டு வரும் துரைமுருகனுக்கும் சில மாதங்களுக்கு முன்பு கேன்டீனில்சாப்பிடும் போது தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் திருநெல்வேலி மாவட்டத்தில் கலவரம் வெடிக்காமல் இருக்க போலீசார் பலத்த பாதுகாப்புஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.