அக்னி சோதனைக்கு உலக நாடுகள் எதிர்ப்பு
டெல்லி:
இந்தியா நடத்திய அணுகுண்டு ஏந்திச் செல்லும் திறன் மிக்க அக்னி ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா தவிர்த்தபிற உலக நாடுகள் அதிர்ச்சி தெரிவித்துள்ளன.
பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளில் அமெரிக்க நெருக்குதலுக்கு இந்தியா பணிந்து வருவதாக பரவலாகஒரு கருத்து ஏற்பட்டுவரும் நிலையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டிப்பது தனது பாதுகாப்பு விவகாரத்தில் எந்தநாட்டின் தலையீட்டையும் ஏற்க முடியாது என்பதை இந்தியா வெளியுலகுக்கு எடுத்துக் காட்டிவிட்டது.
இதன்மூலம் பாகிஸ்தானுக்கு நேரடியாகவும் சீனாவுக்கு மறைமுகமாகவும் இந்தியா தனது எச்சரிக்கைவிடுத்துள்ளதாக பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்கா எதிர்க்காதது ஏன்?
இந்தச் சோதனையை அமெரிக்கா எதிர்க்கவில்லை. இதற்கு முக்கியக் காரணம் நேற்று தான் அமெரிக்காவும் ஒருஏவுகணைச் சோதனையை நடத்தியது. ஏவுகணைகளுக்கு எதிரான கவசத்தை உருவாக்கும் முயற்சியில்ஈடுபட்டுள்ள அமெரிக்கா நேற்று இதற்குத் தேவையான ஒரு ஏவுகணைச் சோதனையை நடத்தியது.
இந்திய ஏவுகணைச் சோதனை குறித்து கருத்துத் தெரிவித்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காலின்பாவல், இது பாகிஸ்தானுக்கு எதிரானது அல்ல. இச் சோதனையால் தெற்காசியாவின் அமைதி பாதிக்கப்படாது.இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பெரும் பதற்றம் நிலவி வரும் நிலையில் இந்தச் சூழ்நிலையில் சோதனையைஇந்தியா நடத்தியிருக்க வேண்டாம். இருந்தாலும் இச் சோதனையால் எந்தப் பிரச்சனையும் வராது என்றார்.
சீனா மறைமுகத் தாக்குதல்:
பாகிஸ்தானுக்கு ஏவுகணைத் தொழில்நுட்பத்தை வழங்கி வரும் மிக முக்கிய நாடான சீனா, இந்த ஏவுகணைச்சோதனையை நேரடியாக கண்டிக்கவில்லை என்றாலும் மறைமுகமாகத் தாக்கியுள்ளது.
தெற்கு ஆசியப் பகுதியில் அமைதியை கட்டிக்காக்க அனைத்து நாடுகளும் முயற்சி மேற்கொள்வார்கள் எனநம்புகிறோம் என சீனா கூறியுள்ளது.
இந்தியாவின் அக்னி சீனாவையும் தாக்கும் வல்லமை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து எதிர்ப்பு:
இந்தியா நடத்தியுள்ள அக்னி சோதனை தேவையில்லாத பதற்றத்தை உருவாக்கும் என இங்கிலாந்து கூறியுள்ளது.இந்த நேரத்தில் இச் சோதனையை இந்தியா தவிர்த்திருக்க வேண்டும் என அந் நாடு கூறியுள்ளது.
ஜப்பான் வருத்தம்:
இந்தியாவின் ஏவுகணைச் சோதனை வருத்தமளிக்கிறது என ஜப்பான் கூறியுள்ளது. இந்திய-பாகிஸ்தான்எல்லையில் இப்போது நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையை இது மேலும் மோசமாக்கும். விரைவில் இருநாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என்று நம்புகிறோம் எனவும் ஜப்பான் கூறியுள்ளது.
எதிர்மறையான செயல்: ஐரோப்பிய யூனியன்:
இந்தியா நடத்தியுள்ள இந்தத் தாக்குதல் தெற்காசியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதுமே எதிர்மறையானவிளைவுகளை ஏற்படுத்தும் என ஐரோப்பிய யூனியன் கருத்துத் தெரிவித்துள்ளது.
ஆனால், இந்தச் சோதனையை இந்தியா தனது பாதுகாப்புக்காக நடத்தியுள்ளது என ரஷ்யா நேற்றே கருத்துத்தெரிவித்துவிட்டது.