இன்று பாஜகவில் இணைகிறார் திருநாவுக்கரசு
டெல்லி:
எம்.ஜி.ஆர். அதிமுக கட்சியைக் கலைத்துவிட்டு அக்கட்சியின் தலைவர் திருநாவுக்கரசு இன்று (வெள்ளிக்கிழமை)பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் முன்னிலையில் பாஜகவில் இணைகிறார்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அக்கட்சியிலிருந்து பிரிந்து சென்றதிருநாவுக்கரசு, எம்.ஜி.ஆர். அதிமுக கட்சியைத் துவக்கினார்.
அதிமுவிலிருந்து பிரிந்து வந்த போதிலும், அவர் தன்னுடைய அறந்தாங்கி தொகுதியில் நின்று தொடர்ந்து வெற்றிபெற்று வந்தார்.
இதற்கிடையே சில எம்.பிக்களை வைத்துக் கொண்டு தேசிய முன்னணியிலும் அங்கம் வகித்த திருநாவுக்கரசு, தன்கட்சிக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்க வேண்டும் என்று எவ்வளவோ முயற்சித்தார். ஆனால் அதற்குப் பலன்கிடைக்கவில்லை.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன், எம்.ஜி.ஆர். அதிமுகவைக் கலைத்துவிட்டு பாஜகவில் சேரப்போவதாகத் திடீரென்று திருநாவுக்கரசு அறிவித்தார்.
அதன்படி இன்று வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி மற்றும் பாஜக தலைவர் ஜனா. கிருஷ்ணமூர்த்திஆகியோர் முன்னிலையில் அக்கட்சியில் ஐக்கியமாகவுள்ளார் திருநாவுக்கரசு.
இதற்காக திருநாவுக்கரசும் எம்.ஜி.ஆர். அதிமுகவைச் சேர்ந்த பிரதிநிதிகளும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும்ஏற்கனவே விமானம் மற்றும் ரயில்கள் மூலம் டெல்லி சென்று சேர்ந்துவிட்டனர்.
எந்தவிதமான நிபந்தனையுமின்றி நாங்கள் பாஜகவில் இணைகிறோம். ஆனாலும் அக்கட்சியில் எங்களுக்குகெளரவமான பதவி அளிக்கப்படும் என்று நம்புவதாக திருநாவுக்கரசு டெல்லியில் நிருபர்களிடம் கூறினார்.
தமிழக பாஜக தலைவர் டாக்டர் கிருபாநிதி, பொதுச் செயலாளர் இல. கணேசன் ஆகியோரும் இன்றைய இணைப்புவிழாவில் கலந்து கொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications