ஜெயாவுக்கு கருணாநிதி, ப.சிதம்பரம் வாழ்த்து
சென்னை:
ஆண்டிப்பட்டியில் வெற்றி பெற்ற ஜெயலலிதாவை அவருடைய பிறந்த நாளுக்காக வாழ்த்துகிறேன் என்று திமுகதலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் கருணாநிதி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
ஆண்டிப்பட்டி தேர்தல் முடிவு, எல்லோரும் எதிர்பார்த்தது தான். வெற்றி பெற்றவரை அவருடைய பிறந்தநாளுக்காக வாழ்த்துகிறேன்.
கடந்த தேர்தலில் அதிமுக 60,000 வாக்குகளைத் தான் பெற்றது. இம்முறை 78,000 வாக்குகள் பெற்றிருக்கின்றனர்.17,000 வாக்காளர்கள் போலியாக சேர்க்கப்பட்டுள்ளதால் அவர்கள் கூடுதலாக அந்த வாக்குகளைப்பெற்றிருக்கின்றனர்.
நாங்கள் கடந்த முறை வாங்கியிருந்த வாக்குகளை விட 2,000 வாக்குகள் அதிகமாக வாங்கியிருக்கிறோம். இதைதிமுகவுக்கு கிடைத்த வெற்றியாக, எழுச்சியாக கருதுகிறேன்.
பணபலத்தையும், அதிகாரப் பலத்தையும் மீறி இந்த அளவுக்கு வாக்குகளைப் பெற்றுள்ளோம் என்றால் அது திமுகவலுவோடு தான் இருக்கிறது என்பதற்கு ஒரு உதாரணமாகும் என்று கருணாநிதி கூறினார்.
சிதம்பரம்:
ஆண்டிப்பட்டியில் வெற்றி பெற்ற ஜெயலலிதாவுக்கு நல்வாழ்த்துக்கள் என்று காங்கிரஸ் ஜனநாயகப் பேரவைப்பொதுச் செயலாளர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
கோயம்புத்தூர் நிருபர்களுக்கு சிதம்பரம் பேட்டியளிக்கையில் கூறியதாவது:
வெற்றி பெற்ற ஜெயலலிதாவுக்கு நல்வாழ்த்துக்கள். ஜெயலலிதா வெற்றி பெற்ற பின்னர் ஆட்சியில் மாற்றம்ஏற்படும் என பத்திரிக்கைகள் எழுதியுள்ளன.
ஜெயலலிதா வேகமாகவும், துடிப்பாகவும் செயல்பட்டு தமிழகத்தை முன்னேற்ற, வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று சிதம்பரம் கூறினார்.
தங்கபாலு:
மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆண்டிப்பட்டித் தொகுதியில் வெற்றி பெற்ற ஜெயலலிதாவுக்கு வாழ்த்துக்கள்என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு கூறினார்.
இல.கணேசன்:
பிறந்த நாள் மற்றும் தேர்தல் வெற்றிக்காக தங்களைப் பாராட்டுகிறேன் என்று தமிழக பாஜக பொதுச் செயலாளர்இல.கணேசன் கூறினார்.