மதுரையில் கள்ள நோட்டுடன் திரிந்த 2 பேர் கைது
மதுரை:
மதுரையில் 50, 100 ரூபாய் கள்ள நோட்டுக்கள் வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரையில் சமீப காலமாகவே கள்ள நோட்டுக்கள் புழக்கத்தில் இருப்பதாக சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு ரகசியதகவல் வந்தது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் மதுரை முழுவதும் ரகசியமாக சோதனை மேற்கொண்டுவந்தனர்.
இந்நிலையில் மதுரை மாட்டுத்தாவனி பேருந்து நிலையத்தில் 2 பேர் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தனர்.அவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர்கள் பையில் கட்டுக்கட்டாக 50, 100 ரூபாய் கள்ள நோட்டுக்கள் இருப்பது தெரிய வந்தது.அவர்களை விசாரித்ததில் அவர்கள் 2 பேரும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.
புதுக்கோட்டையில் உள்ள விளானூர் பஞ்சாயத்து போர்டு தலைவர் செல்வராஜ் இந்த பணத்தை கொடுத்ததாகவும்அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
கள்ள நோட்டுக்கள் தொடர்பாக செல்வராஜை கைது செய்ய போலீசார் தேடி வருகின்றனர்.