அயோத்தி: நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் அமளி
டெல்லி:
அயோத்தி விவகாரம் இன்று நாடாளுமன்றத்தில் பெரும் அமளியைக் கிளப்பியது.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று ஜனாதிபதியின் உரையுடன் தொடங்கியது. இன்று ரயில்வேபட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.
இதற்காக லோக்சபா காலை தொடங்கியது. முதலில் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால், காங்கிரஸ்,கம்யூனிஸ்ட் கட்சி எம்.பிக்கள் எழுந்து அயோத்தி பிரச்சனை குறித்து விவாதிக்க வேண்டும் எனக் கோரினர்.கேள்வி நேரத்தை ரத்து செய்யக் கோரினர்.
விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பினர் கோவில் கட்டுமானப் பொருள்களுடன் அயோத்தியில் குவிந்துகொண்டிருப்பதால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருவதை எதிர்க் கட்சியினர் சுட்டிக் காட்டினர். அங்குஅவர்களைத் தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என பிரதமர் முதலில் விளக்க வேண்டும் என்றனர்.
இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால் எம்.பிக்கள் அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். அப்போது பேசிய பிரதமர்இது குறித்து விவாதிக்கத் தயாராக இருப்பதாவும் கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க வேண்டிய அவசியமில்லைஎன்றும் கூறினார்.
இதையடுத்து எதிர்க் கட்சி எம்.பிக்கள் அவையின் மையப் பகுதியில் கூடி அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.இதனால் குழப்பம் நிலவியது. அவையை சபாநாயகர் ஒத்தி வைத்தார்.
இதே போல ராஜ்யசபாவிலும் அயோத்தி பிரச்சனை வெடித்தது. ராஜ்யசபாவும் ஒத்தி வைக்கப்பட்டது.
பின்னர் எதிர்க் கட்சிகள் சமாதானமடைந்து இருக்கைக்குத் திரும்பியவுடன் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. தொடர்ந்து ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் நிதிஷ்குமார்.
ஆனால், ராஜ்யசபாவில் உறுப்பினர்கள் போராட்டம் தொடர்ந்ததால் அவை பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்படடது.
இன்று மாலை அயோத்தி பிரச்சனை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பிரதமர் கூட்டியுள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது.