அயோத்தி: பிரதமர்-சங்கராச்சாரியார் நள்ளிரவில் ஆலோசனை
டெல்லி:
பிரதமரின் சார்பில் வி.எச்.பியுடன் பேச டெல்லி வந்துள்ள காஞ்சி சங்கராச்சாரியாரை தேசிய ஜனநயாகக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும் பாதுகாப்பு அமைச்சருமான ஜார்ஜ் பெர்னாண்டஸ் இன்று காலை சந்தித்துப்பேசினார்.
நேற்றிரவில் சங்கராச்சாரியார் பிரதமர் வாஜ்பாயை சந்தித்து நெடு நேரம் விவாதித்துக் கொண்டிருந்தார். நள்ளிரவுவரை இச் சந்திப்பு நீடித்தது.
வரும்ம் 12ம் தேதி முதல் கோவில் கட்டத் தேவையான தூண்களை அயோத்திக்குக் கொண்டு செல்லவும், 15 தேதிகோவில் கட்டும் பணியைத் தொடங்கவும் விஸ்வ ஹிந்து பரிஷத் திட்டமிட்டுள்ளது.
இதனால் குஜராத் உள்ளிட்ட இடங்களில் பெரும் வன்முறை பரவியுள்ள நிலையிலும் வி.எச்.பி. தனது நிலையில்பிடிவாதமாக உள்ளது. நடவடிக்கை எடுக்க வேண்டிய மத்திய அரசும் வி.எச்.பியிடம் கெஞ்சிக் கூத்தாடி வருகிறது.
வி.எச்.பி. தலைவர்களை சமாளிக்க காஞ்சி சங்கராச்சாரியாரின் உதவியை மத்திய அரசு நாடியது. அவருக்கு சிறப்புவிமானம் அனுப்பி டெல்லி அழைத்துச் சென்றது. அவரும் நேற்று வி.எச்.பி. தலைவர்களுடன் பேசினார். ஆனால்,பலன் ஏதும் ஏற்படவில்லை.
இதையடுத்து பிரதமரை சங்கராச்சாரியார் சந்தித்து வி.எச்.பி. தலைவர்களுடன் பேசியது குறித்து விளக்கினார்.அப்போது அயோத்தியில் பிரச்சனைக்குள்ளாகாத இடத்தில் போடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்குமாறு அவர்பிரதமரை வலியுறுத்தியதாகத் தெரிகிறது. மேலும் கோவில் தூண்களுக்கு இந்த இடத்தில் வைத்து பூஜை செய்யவும்அனுமதிக்க வேண்டும் என அவர் வாஜ்பாயை அறிவுறுத்தினார்.
சிக்கலில் உள்ள நிலத்தைச் சுற்றியுள்ள பிரச்சனைக்குள்ளாகாத நிலத்தை ராமஜென்ம பூமி அறக்கட்டளையிடம்ஒப்படைக்க வேண்டும் எனவும் அவர் வாஜாபாயிடம் கேட்டுக் கொண்டார்.
ஆனால், அவ்வாறு இடத்த்ைத தந்து பூஜை செய்ய அனுமதித்தால் நாடு முழுவதும் வன்முறை பரவும் என்பதைவிளக்கிய வாஜ்பாய் இந்தத் திட்டத்தை கைவிடச் செய்யுமாறு வி.எச்.பி. தலைவர்களிடம் விளக்குமாறு காஞ்சிசங்கராச்சாரியாரிடம் கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது.
இந் நிலையில் அவரை பெர்னாண்டஸ் காலையில் சந்தித்துப் பேசினார். தெற்கு டெல்லியில் உள்ள காமாட்சிகோவிலில் தங்கியுள்ள சங்கராச்சாரியாரை பெர்னாண்டஸ் அதிகாலையில் சந்தித்து அரைமணி நேரம் பேசிக்கொண்டிருந்தார்.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் முரளிமனோகர் ஜோஷியும் அவரை நேற்றிரவில் சந்தித்தார். இவர்தீவிர வி.எச்.பி. ஆதரவாளர்.
இதற்கிடையே வாஜ்பாய்-சங்கராச்சாரியார் சந்திப்பின்போது நடந்த ஆலோசனைகள் குறித்து விவாதிக்க வி.எச்.பி.தலைவர்கள் இன்று மீண்டும் டெல்லியில் சந்தித்துப் பேசி வருகின்றனர்.