தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி வாஜ்பாய்க்கு ஜெ. அவசர கடிதம்
சென்னை:
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரிபிரதமர் வாஜ்பாய்க்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து ஜெயலலிதா அனுப்பியுள்ள பேக்ஸ் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
நாகப்பட்டினம் பகுதியிலிருந்து 12 மீனவர்கள் கடந்த மாதம் 15ம் தேதி மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் தங்கள்நாட்டு எல்லையில் மீன் பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படையினர் பிடித்துச் சென்று விட்டனர்.
பின்னர் அடுத்த சில நாட்களிலேயே மேலும் 10 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றனர்.இந்த 22 தமிழக மீனவர்களும் தற்போது இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனால் நாகப்பட்டினம் பகுதியில் சட்டம்-ஒழுங்கு பெரிதும் பாதிக்கப்பட்டு, அசாதாரண சூழ்நிலை நிலவிவருகிறது. மேலும் நாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களும் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
எனவே தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரி இலங்கை அரசை பிரதமர் வாஜ்பாய் வற்புறுத்தவேண்டும் என்று ஜெயலலிதா அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications