மரக்காணம் தாக்குதல் விவகாரம்: சட்டசபையில் பாமக வெளிநடப்பு
சென்னை:
மரக்காணத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்கள் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானம்கொண்டு வர சபாநாயகர் காளிமுத்து அனுமதி தர மறுத்ததையடுத்து, தமிழக சட்டசபையிலிருந்து பாமகஎம்.எல்.ஏக்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.
மாமல்லபுரத்தில் நடந்த சித்ரா பவுர்ணமி விழாவுக்குச் சென்று கொண்டிருந்த பாமக தொண்டர்கள், விழுப்புரம்மாவட்டம் மரக்காணம் அருகே பயங்கரமாகத் தாக்கப்பட்டனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடந்த இச்சம்பவத்தில் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார். 15க்கும்மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். பாமகவினர் வந்த வேன்களும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.
இதையடுத்து அப்பகுதியில் ஜாதிக் கலவரம் மூளும் அபாயம் ஏற்பட்டது. உடனடியாக நூற்றுக்கணக்கானஅதிரடிப்படை போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் பாமகவினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக, கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரவேண்டும் என்று அக்கட்சியின் சட்டசபைத் தலைவர் ஜி.கே. மணி கோரிக்கை எழுப்பினார்.
ஆனால் இது தொடர்பாகப் பேசக் கூடாது என்று காளிமுத்து கூறினார். மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாகதொடர்ந்து பேசுவதற்கும் அனுமதி கிடையாது என்று அவர் மணியிடம் கூறினார்.
இதையடுத்து மணி தலைமையில் பாமகவினர் அனைவரும் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர்நிருபர்களிடம் மணி கூறியதாவது:
மாமல்லபுரத்தில் நடக்கும் இந்த நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடத்தப்படும் ஒரு சமுதாய நிகழ்ச்சியாகும்.
இந்த விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கூட நான்கு ஆண்டுகளுக்கு முன் ஒரு முறை கலந்து கொண்டுள்ளார்.
தற்போது திட்டமிடப்பட்டு வேண்டுமென்றே எங்கள் தொண்டர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டு,தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இப்பிரச்சனை குறித்து சட்டசபையில் எங்களைப் பேசுவதற்குக் கூட சபாநாயகர் அனுமதி தர மறுக்கிறார். இதனால்இந்தத் தாக்குதலுக்கும் அதிமுகவுக்கும் தொடர்பு உண்டோ என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
சம்பவம் நடந்து மூன்று நாட்களாகியும் இன்னும் சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லைஎன்று குற்றம் சாட்டினார் மணி.