நாங்கள் ஆசிட் வீசினோமா?: ஜெவுக்கு கருணாநிதி பதிலடி
சென்னை:
திமுக ஆட்சியில் பொறுப்பில் இருந்தபோது எந்த அதிகாரிகளையும் சவுக்கால் அடிக்கவோ, முகத்தில் ஆசிட் வீசவோ இல்லை என்பதுசரித்திர உண்மை என்று கருணாநிதி கூறியுள்ளார்.
திமுக ஆட்சியில் அதிகாரிகள் வேலையே பார்க்கவில்லை. இப்போது நான் சர்க்கசில் வரும் ரிங் மாஸ்டர் மாதிரி சவுக்கால் அடித்து வேலைவாங்குகிறேன் என்று சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தார். இதற்கு பதில் தந்து திமுக தலைவர் கருணாநிதிதொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதம்:
எங்க வீட்டு பிள்ளை படத்தில் எம்.ஜி.ஆர் கொடுத்த சவுக்கடிக்குப் பிறகு ஜெயலலிதா சட்ட சபையில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்டஅனைத்து அதிகாரிகளுக்கும் சவுக்கடி கொடுத்துள்ளார். சிவபெருமான் மீது விழுந்த பிரம்படி உலக மக்கள் மீது விழுந்த பிரம்படி என்றுபுராணத்தில் கூறியுள்ளது போல், ஜெயலலிதாவின் சவுக்கடி அனைத்து அதிகாரிகளின் மீதும் விழுந்துள்ளது.
சட்ட சபை ஆரம்பித்த நாள் முதல் அமைச்சர்கள் மற்றும் முதல்வர் குறிப்பிட்ட புள்ளி விபரத் தவறுகளை, முரண்பாடுகளை எடுத்துவிளக்கியிருந்தேன். உள்துறைக் கொள்கை குறிப்பில் ஏற்பட்ட முரண்பாடுகளை இவ்வாறு விளக்கியிருந்த போது, அதை ஜெயலலிதா ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். மேலும், உள்துறைச் செயலாளரை விட்டு பதில் அறிக்கையும் வெளியிட்டார்.
அதுவும் தவறு என்று நான் கூறியவுடன், வாயை மூடிக் கொண்ட ஜெயலலிதா, நேற்று இதற்கு ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். செய்ததவறை முதலிலேயே ஒப்புக்கொண்டிருக்கலாமில்லையா? எப்படியோ கொடுத்த புள்ளி விபரக் கணக்கு தவறு என்று ஒப்புக் கொண்டதற்குநன்றி.
சட்ட சபையில் உறுப்பினர்களோ, அமைச்சர்களோ பார்த்து படிக்கக்கூடாது; பேச வேண்டும் என்று துரைமுருகன் சுட்டிக் காட்டியதற்கு,பொதுக்கூட்டங்களில் பேசுவது போல் பேசுகிறார் என்று கிண்டல் செய்துள்ளார். தேர்தல் பிரச்சாரம் செய்யும் போதே எழுதி வைத்துபடிக்கும் ஜெயலலிதா, மற்றொருவரை கிண்டல் செய்வது வேடிக்கையாக உள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் அதிகாரிகள் மனச்சோர்வு அடைந்துவிட்டதாகக் கூறியிருக்கிறார் ஜெயலலிதா. ஊழலுக்கு துணைபோனஅதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுத்ததால் ஒரு வேளை மனச்சோர்வு அடைந்திருக்கலாம்.
ஆனால் அனைத்து அதிகாரிகளின் மீதும் பழி போட்டுவிட்டு ஜெயலலிதாவும் அமைச்சர்களும் தப்பிக்க முடியாது. சட்ட சபையில்விபரங்களை தெரிவிக்கும் ஒன்றுக்கு நான்கு முறை தெளிவாக கேட்ட பின்னரே அவையில் தெரிவிக்க வேண்டும். நானும் அமைச்சர்களும்அவ்வாறுதான் செய்தோம்.
அதிகாரம் செலுத்தவும் ஆட்டிப்படைக்கவும் தான் நான்; மற்றதெல்லாம் அதிகாரிகளின் பொறுப்பு என்பதாக உள்ளது ஜெயலலிதாவின்செய்கை.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக 5 மாதம் வரை பதவி இழந்திருந்தார் ஜெயலிதா. அப்போது அதிகாரிகள் 11 மணிக்கு தான் அதிகாரிகள்பணிக்கு வந்தனர் என்று கூறியுள்ளார். அப்போது முதல்வராக இருந்த பன்னீர்செல்வத்திற்கு இதைவிட அவமானம் ஏதாவது இருக்கமுடியுமா? இதனால் அதிகாரிகளை இப்போது சவுக்கால் அடித்து வேலை வாங்குகிறாராம்.
ஆனால், திமுக ஆட்சியில் நாங்கள் எந்த அதிகாரிகளையும் சவுக்கால் அடிக்கவும் இல்லை; எந்த பெண் அதிகாரிகள் மீதும் ஆசிட் வீசவும்இல்லை; இது சத்திய உண்மை மட்டுமல்ல; சரித்திர உண்மையும் கூட.
இவ்வாறு கடிதத்தில் எழுதியுள்ளார் கருணாநிதி.
ராமதாஸ் சந்திப்பு:
இந் நிலையில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
சட்டசபை இடைத் தேர்தலில் திமுகவும், பாட்டாளி மக்கள் கட்சியும் கூட்டணி வைத்துப் போட்டியிடுகின்றன. திமுக இரண்டுதொகுதிகளிலும், பாமக அச்சிறுப்பாக்கம் தொகுதியிலும் போட்டியிடுகின்றன.
திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்த ராமதாஸ் சட்டசபைஇடைத் தேர்தல் மற்றும் இப்போதையஅரசியல் சூழ்நலை குறித்துப் பேசியதாகத் தெரிகிறது.
சந்திப்பின் போது பாமக சட்டமன்றத் தலைவர் ஜி.கே.மணியும் உடன் இருந்தார்.