வாஜ்பாய் வீட்டில் தே.ஜ.கூ. கட்சிகள் கூட்டம்
டெல்லி:
குஜராத் விவகாரம் குறித்து விவாதிக்க இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தை பிரதமர்வாஜ்பாய் கூட்டி விவாதித்தார்.
நேற்று டெல்லி வந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பிரதமர் வாஜ்பாயையும், உள்துறை அமைச்சர்அத்வானியையும் சந்தித்துப் பேசினார். அப்போது குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை நீக்க வேண்டும் என்றுமீண்டும் வலியுறுத்தினார். இல்லாவிட்டால் அரசுக்கு தொடர்ந்து ஆதரவு தர முடியாது என்று திட்டவட்டமாக நாயுடுகூறிவிட்டார்.
மோடியை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வரும் நாயுடு இது தொடர்பான தீர்மானம்நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டபோது தனது கட்சி எம்.பிக்களை வெளிநடப்பு செய்ய வைத்துபா.ஜ.கவுக்கு அதிர்ச்சி தந்தார்.
பா.ஜ.க.-தெலுங்கு தேசம் இடையே உறவு மிக வேகமாக சீர்குலைந்து வரும் நிலையில் நாயுடு நேற்று டெல்லிவந்தார். தனது மாநிலத்தின் பல்வேறு திட்டங்களுக்கு நிதி உதவி கேட்டு வந்துள்ளதாக அவர் கூறினார்.
ஆனால், மோடியை நீக்க வேண்டும் என்று வாஜ்பாயிடம் அவர் வலியுறுத்தினார்.
மேலும் இந்த விவகாரத்தில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சு நடத்தக் கூட பா.ஜ.க. மறுத்து வருவதைக் கடுமையாகக்கண்டித்தார். பிரச்சனை அடிப்படையில் தான் மத்திய அரசுக்கு இனி ஆதரவு தரப்படும் என்றும் கூறினார்.
இதையடுத்து நாயுடு டெல்லியில் இருக்கும்போதே தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தைநடத்தவும் கருத்து வேறுபாடுகளைக் கலையவும் பிரதமர் வாஜ்பாய் முடிவு செய்தார்.
மேலும் மோடியை நீக்க முடியாது என்று தொடர்ந்து கூறி வந்த பிரதமர் வாஜ்பாயின் நிலையிலும் மாற்றம்ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மோடிக்கு மேலும் ஒரு வாய்ப்பு தந்து பார்ப்பது இல்லாவிட்டால் நடவடிக்கைஎடுப்பது என்ற முடிவுக்கு அவர் வந்துள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர்களுடன் பேசிவிட்டு இந்த விவகாரத்தில் முக்கிய முடிவை எடுக்கவாய்பாய் திட்டமிட்டுள்ளார்.
இதையடுத்து பிரதமர் வாஜ்பாயின் இல்லத்தில் இந்தக் கூட்டம் நடந்தது.
மேலும் மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்வது குறித்தும், ஜனாதிபதி தேர்தல் குறித்தும் இக் கூட்டத்தில்விவாதிக்கப்பட்டது.
கூட்டம் முடிந்து வெளியே வந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், அடுத்தஜனாதிபதி குறித்து முடிவெடுக்க இக் கூட்டத்தில் பிரதமர் வாஜ்பாய்க்கு கூட்டணிக் கட்சிகள் முழு அதிகாரம்வழங்கின என்றார்.கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பிற விஷயங்கள் குறித்து அவர் ஏதும் விளக்க மறுத்துவிட்டார்.
இக் கூட்டத்தில் வன்முறையை மாநில அரசு உடனே கட்டுப்படுத்த வேண்டும் என்று தீர்மானம்நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம் மோடிக்கு அனுப்பி வைக்கப்படும்.
குஜராத்தில் தொடரும் வன்முறை:
அதே நேரத்தில் குஜராத்தில் வன்முறை தொடர்ந்து வருகிறது. நேற்று அகமதாபாத்தின் பல்வேறு பகுதிகளிலும்வீடுகள் எரிப்பு, கல்வீச்சு, பெட்ரோல் குண்டு தாக்குதல் ஆகியவை நடந்தன. இதையடுத்து அகமதாபாத்தின் 4காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.