வாணியம்பாடியில் ஓங்கி ஒலிக்கும் ஹனீபாவின் குரல்
சென்னை:
வாணியம்பாடியில் உதய சூரியன் பிரகாசமாக காணப்படுகிறான். இரட்டை இலையும் மற்றவர்களும் ரொம்பதூரத்தில் காணப்படுகிறார்கள்.
வாணியம்பாடி இடைத் தேர்தலில் திமுக சார்பில் பிரபல பாடகர் நாகூர் ஹனீபாவின் பெயர்அறிவிக்கப்பட்டபோதே பாதி முடிவு தெரிந்து விட்டதாக திமுக தரப்பில் பேசத் தொடங்கி விட்டனர்.
ஹனீபா என்ற பெயர் இஸ்லாமிய மக்களின் மனதில் மட்டும் இடம் பெற்ற ஒன்றல்ல, மதங்களைக் கடந்த குரல்ரசிகர்களின் இதயங்கள் அனைத்திலும் நீக்கமற இடம் பிடித்துள்ள பெயர் தான் நாகூர் ஹனீபா.
வாணியம்பாடியில் இதை கண்ணாறக் காண முடிகிறது. எங்கு பார்த்தாலும் ஹனீபாவின் வெண்கலக்குரல் தான்.ஹனீபா பாடிய ஹிட் பாடல்கள் தொகுதியைக் கலக்கி வருகின்றன. இத்தனை நாட்களாக திமுகவினன் வெற்றிக்காகஉதவிய இந்தப் பாடல்கள், இப்போது ஹனீபாவுக்காகவே ஒலித்துக் கொண்டிருப்பது மட்டும் தான்வித்தியாசமானதாக இருக்கிறது.
வாணியம்பாடியில் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். அத்தனை பேர் வீட்டிலும் காலையில்ஹனீபாவின் இஸ்லாமியப் பாடல்கள்தான் ஒலிக்குமாம். அவரது பாடலைக் கேட்டு விட்டுத் தான் அத்தனை பேரும்வாழ்க்கையைத் தொடங்குவது வழக்கமாக இருக்கிறது.
இந்நிலையில் அவரே தேர்தலில் போட்டியிடுவதால் நிச்சயம் ஹனீபாவின் வெற்றி உறுதியானது என்று தொகுதியில்பேச்சு பலமாக அடிபடுகிறது.
தொகுதிக்குப் புதியவர் என்ற ஒரு அம்சம் மட்டுமே ஹனீபாவுக்கு எதிராக இருக்கிறது. ஆனால் அதையும் தாண்டியபெயர்க் கவர்ச்சி இருப்பதால் வெற்றிக்குப் பாதகம் இல்லை என்று திமுகவினர் திட்டவட்டமாக நம்புகிறார்கள்.இன்னொரு விஷயம் லெப்பை எனப்படும் தமிழ் பேசும் முஸ்லீம் ஹனீபா. ஆனால் வாணியம்பாடியில்இருப்பவர்கள் பெரும்பாலும் உருது பேசும் முஸ்லீம்கள்தான் இருக்கிறார்கள். ஆனால் இதுகுறித்துக்கவலைப்படவில்லை ஹனீபா.
இஸ்லாமியர்களின் இதயங்களில் வீற்றிருப்பவன் நான். தமிழ், உருது என்ற பாகுபாடு எனக்கு எதிராக அமையாது.அனைத்து இஸ்லாமியர்களின் ஆதரவும் எனக்கு உண்டு என்று நம்புகிறார் ஹனீபா. பள்ளிவாசல்கள், கல்யாணநிகழ்ச்சிகள் ஆகிய இடங்களுக்குச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார் ஹனீபா. பிரசாரக் கூட்டங்களில் அவரேபாடி வருகிறார். வயதான போதிலும் கூட அசராது, சுறுசுறுப்பாக அவர் செய்து வரும் பிரசாரம் தொகுதி மக்களைக்கவர்ந்துள்ளது.
அதேசமயம், அதிமுக சார்பில் போட்டியிடும் வடிவேலுவும் தெம்பாகவே காணப்படுகிறார். வாணியம்பாடிதொகுதிக்குட்பட்ட பல ஜமாத்துகள் அதிமுகவுக்கு ஆதரவான நிலையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் முஸ்லீம்களுக்கு அடுத்தபடியாக இருக்கும் முதலியார் வகுப்பைச் சேர்ந்தவரான வடிவேலுவுக்குமுஸ்லீம்களின் ஒரு பகுதி ஓட்டுடன், தனது சமுதாயத்தினரின் ஓட்டுக்களும் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஜெயலலிதாவின் தற்போதைய பிரச்சாரம் தனக்கு பெரும் பூஸ்ட் ஆக அமையும் என்றும் அவர்தைரியத்துடன் காணப்படுகிறார்.
ஆனாலும் இப்போதைக்கு ஹனீபாவின் கையே ஓங்கியுள்ளது. இலை, தளிர் விட்டு வேகமாக வளருமா அல்லதுஉதயசூரியனின் பார்வையில் பொசுங்கிப் போகுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.