சைதையில் திமுக தொண்டருக்கு அரிவாள் வெட்டு: பெரும் பதற்றம்
சென்னை:
டேப்பில் பதிவு செய்யப்பட்ட திமுக தலைவர் கருணாநிதியின் பேச்சைக் கேட்ட திமுக தொண்டருக்கு அரிவாள்வெட்டு விழுந்ததைத் தொடர்ந்து சைதாப்பேட்டை தொகுதியில் நேற்றும் பெரும் பதற்றம் நிலவியது.
நாளை தேர்தல் பிரச்சாரம் ஓயப் போகும் நிலையில், சைதாப்பேட்டை தொகுதியில் பிரச்சாரம் களை கட்டியுள்ளது.தமிழக முதல்வர் ஜெயலலிதா, கருணாநிதி, வைகோ என்று முன்னணித் தலைவர்கள் அனைவரும் இத் தொகுதியில்தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று மாலை கோட்டூர்புரம் பகுதியில் கருணாநிதி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்பகுதியில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு அவர் சென்றதும், சித்ரா நகரைச் சேர்ந்த சுப்பிரமணி (34) என்றதிமுக தொண்டர் தன்னுடைய வீட்டில் கருணாநிதியின் பதிவு செய்யப்பட்ட பேச்சை டேப்பில் போட்டுக் கேட்டுக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று ஐந்து பேர் கொண்ட ஒரு கும்பல் சுப்பிரமணியின் வீட்டுக்குள் "திமுதிமு"வென்று நுழைந்தது.
வீட்டிலுள்ள பொருட்களையெல்லாம் அங்கும் இங்குமாகத் தூக்கி எறிந்த அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள்,சுப்பிரமணியை சராமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு ஓடிவிட்டனர்.
பலத்த காயங்களுடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் சுப்பிரமணி. அங்கு அவருக்குத்தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து கோட்டூர்புரம் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
இது தொடர்பாக கோட்டூர்புரம் போலீஸ் நிலையத்தில் திமுகவினர் புகார் தெரிவித்தனர். அதிமுகவினர் தான் இந்தச்சம்பவத்திற்குக் காரணம் என்று அவர்கள் தங்கள் புகாரில் கூறியுள்ளனர்.
போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.