"ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்காவிட்டால்...": கருணாநிதி எச்சரிக்கை
சென்னை:
ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்தி பெயரைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். இல்லையென்றால் அடுத்த 4ஆண்டுகளுக்கும் நிம்மதியாக ஆட்சி நடத்த முடியாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு திமுக தலைவர்கருணாநிதி பகிரங்கமாகவே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சைதாப்பேட்டை தொகுதியில் நேற்று இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தின் போது கருணாநிதி கூறியதாவது:
திமுக வரலாற்றில் எப்படி எனக்கு ஒரு இடம் உண்டோ அதைப் போலவே என்னுடைய வரலாற்றிலும்சைதாப்பேட்டைக்கு ஒரு இடம் உண்டு.
திமுக வேட்பாளரான மா. சுப்பிரமணியத்துக்கு இத்தொகுதியில் தெரியாத வீடுகளோ தெருக்களோ கிடையாது.இத்தொகுதி மக்களுக்காக உழைக்கும் ஆற்றல் பெற்றவர் அவர்.
பிரச்சாரத்தோடு எங்கள் வேலை முடிந்து விட்டது. இனி சுப்பிரமணியத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டியது உங்கள்(மக்கள்) வேலை.
ஜெயலலிதா என்னை எப்படி வேண்டுமானாலும் அழைக்கட்டும். ஆனால் அவரை நான் "அம்மையார் ஜெயலலிதா"என்று மரியாதையாக அழைப்பது தான் என் வழக்கம்.
இந்த இடைத் தேர்தல் மூலம் ஜெயலலிதாவுக்குப் புத்தி சொல்ல முடியும். நீயா எனக்கு புத்தி சொல்வது என்று அவர்கேட்கக் கூடும். ஆனால் புத்தி சொல்ல வேண்டிய கடமை நமக்கு உண்டு. இத்தேர்தல் மூலம் அவர் திருந்திக்கொள்ள வேண்டும்.
கடந்த ஒரு ஆண்டில் எவ்வளவு செய்ய முடியுமோ அவ்வளவும் செய்து விட்டார் அந்த அம்மையார். பழிவாங்கும்படலத்தில் மீதம் எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
தனக்கு ஓட்டுப் போட்ட மக்களையும் வரி விதிப்பு, கட்டண உயர்வுகள் என்று அந்த அம்மையார் வாட்டியெடுத்துவிட்டார். இவற்றையெல்லாம் அவர் திரும்பப் பெற வேண்டும் என்று அவருக்கு உறைக்கும் வகையில் மக்கள்ஓட்டளிக்க வேண்டும். அவருக்குப் பாடம் புகட்ட வேண்டும்.
ஜெயலலிதா அம்மையார் இந்தத் தொகுதியைச் சுற்றிப் பார்த்த போதே தனக்கு வெற்றி கிடைக்காது என்ற முடிவுக்குவந்துள்ளார் என்ற செய்தி கிடைத்துள்ளது. என்னால் இன்றைக்கே தேர்தல் முடிவுகளைச் சொல்ல முடியும்.
சுப்பிரமணியத்தை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று மக்கள் முடிவு செய்து விட்டனர். இதை முறியடிக்கவன்முறையைக் கட்டவிழ்த்து விட அதிமுக அரசு முயற்சிக்கிறது.
போலீஸ் துணையோடு வெற்றி பெற அவர்கள் நினைப்பதற்கு இது ஒன்றும் மாநகராட்சித் தேர்தல் அல்ல.
ரொம்பவும் கீழே இறங்க நினைக்காதீர்கள். ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தி இன்னும் நான்கு ஆண்டுகள்இந்த அரசு தொடர்ந்தால் என்னை விட மகிழ்ச்சி அடைபவன் யாரும் இருக்க முடியாது.
வெற்றியோ தோல்வியோ ஜனநாயக ரீதியில் தேர்தலை நடத்தி பெயரைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.இல்லையெனில் நான்கு ஆண்டுகளும் நிம்மதியாக ஆட்சி நடத்த முடியாது என்றார் கருணாநிதி.