அதிகாரம் இல்லாத மேயர் பதவி தேவையில்லை: ஸ்டாலின்
சென்னை:
மேயர் கவுனை மாட்டிக் கொண்டு கவுன்சில் கூட்டங்களுக்குத் தலைமை தாங்குவதற்கு மட்டுமே மேயர் பதவிஎன்றால் அப்பதவி தனக்குத் தேவையில்லை என்று சென்னை மாநகர மேயர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஒருவருக்கு ஒரு பதவி என்ற சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ராமமோகன் ராவ் ஒப்புதல் அளித்துள்ளார்.இதையடுத்து ஸ்டாலின் என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் தான் விரைவில் மேயர் பதவியையே துறக்கவுள்ளதாக ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் நடந்தஒரு திருமண விழாவின் போது அவர் பேசுகையில்,
வெறும் கருப்பு கவுனை மாட்டிக் காண்டு கூட்டங்களுக்குத் தலைமை தாங்குவதற்கு மட்டுமே மேயர் பதவிஎன்றால் அது எனக்குத் தேவையில்லை. அதிகாரமே இல்லாத மேயர் பதவியை வகித்து என்ன பயன்?
இதுவரை சென்னை மாநகராட்சிக்கு 43 மேயர்கள் இருந்துள்ளனர். நான் 44வது மேயராகத் தேர்வுசெய்யப்பட்டபோது மக்களால் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெயரைப் பெற்றேன்.
இரண்டாவது முறை கடந்த ஆண்டு அக்டோபரில் போட்டியிட்ட போது நிச்சயம் நான் வெற்றி பெற்று விடுவேன்என்பதை அறிந்த ஆளுங்கட்சியினர் வரலாறு காணாத வன்முறையில் இறங்கி என்னைத் தோற்கடிக்க முயன்றனர்.
ஆனால் அவர்களது தில்லுமுல்லுகளையும் மீறி நான் வெற்றி பெற்றேன். அன்று முதலே என்னைஅவமானப்படுத்தும் வேலைகளில் ஈடுபடத் தொடங்கினர் ஆளும் அதிமுகவினர்.
அதன் கடைசி முயற்சியாகவே என்னுடைய பதவியைப் பறிக்க சட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள். பழி வாங்கும்சட்டம் இல்லை என்று அவர்கள் கூறினால் தேர்தலுக்கு முன்பே கொண்டு வந்திருக்க வேண்டும். அல்லது அடுத்ததேர்தலுக்கு முன்பாகக் கொண்டு வந்திருக்க வேண்டும்.
மேயருக்குரிய அதிகாரங்கள் அனைத்தும் மாநகராட்சி கமிஷனருக்கு வழங்கப்பட்டுள்ளது. அப்படியென்றால்மேயர் பதவி எதற்கு? முதல்வரின் அதிகாரங்கள் அனைத்தையும் தலைமை செயலாளருக்குக் கொடுத்து விட்டால்முதல்வர் பதவி எதற்கு என்பது போலத் தான் இதுவும் உள்ளது.
எனது மேயர் பதவியை ராஜினாமா செய்வதா, இல்லையா, அரசின் சட்டம் குறித்து சட்டரீதியான நடவடிக்கைஎடுக்கப்படுமா, இல்லையா என்பது குறித்து திமுக தலைமை தான் முடிவு செய்யும் என்றார் ஸ்டாலின்.