விவசாயிகள் ஓலமும்.. செவிடான அரசும்
எந்தப் பிரச்சினை தீர்ந்தாலும் இரண்டு பிரச்சினைகளுக்கு மட்டும் தீர்வே இல்லை போலிருக்கிறது. ஒன்று கள்ள ஓட்டுப் பிரச்சனை,இன்னொன்று காவிரிப் பிரச்சினை.
காவிரி டெல்டா பாசன விவசாயிகள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களது குறை தீர்க்கும் எந்த முயற்சியிலும் தமிழக அரசுஈடுபடாமல் அமைதி காப்பது விவசாயிகளின் கண்களில் ரத்தத்தை வரவழைத்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் காவிரியில் தண்ணீர் தேவை என்று தமிழகம் கேட்பதும், கொடுக்க முடியாது என்று கர்நாடகம் மறுப்பதும்வாடிக்கையாகி விட்டது.
நூறாண்டுகளுக்கு முன்பு போட்ட ஒப்பந்தம் செல்லாது என்று கர்நாடகமும், அந்த ஒப்பந்தம் இன்னும் உயிருடன் தான் உள்ளது தமிழகமும்நீதிமன்றம், நடுவர் மன்றம் என அனைத்து சட்ட மன்றங்களிலும் வாதாடி வருகின்றன.
இதில் அரசியலும் சேர்ந்து கொள்வதால் இந்த சதுரங்கத்தில் சிக்கி சின்னாபின்னாவாகி வருகின்றனர் விவசாயிகள்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டனம் ஆகிய மூன்று மாவட்டங்கள் காவிரிப் பாசனப் பகுதி மாவட்டங்கள். அத்தோடு, திருச்சிமாவட்டத்தின் சில பகுதிகளிலும் காவிரி நீரை நம்பிய பாசனப் பகுதிகள் உள்ளன.
இந்தப் பகுதிகளில் ஜூன் மாதத்தில் குறுவை சாகுபடி ஆரம்பமாகும். குறுவைப் பயிர்களுக்கு தண்ணீர் போதுமான அளவு இருக்கவேண்டும். இல்லாவிட்டால் பயிர்கள் கருகி வீணாகி விடும்.
மேட்டூர் அணையில் குறைந்தது 40 அடி தண்ணீராவது இருந்தால்தான் குறுவைப் பயிருக்குத் தேவையான தண்ணீரை திறந்து விட முடியும்.ஆனால் இப்போது மேட்டூர் அணையில் வெறும் 10 அடிதான் தண்ணீர் உள்ளது.
கர்நாடக அரசு உடனடியாக தமிழகத்தின் பங்கான காவிரி நீரை திறந்து விட்டு குறுவைப் பயிர்களைைக் காக்க வேண்டும் என்றுவிவசாயிகள் கோரியுள்ளனர். பல்வேறு கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன. கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் சார்பில் காவிரிப்பாசனப் பகுதி மாவட்டங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஆனால் தமிழக அரசு இதுவரை விவசாயிகள் கோரிக்கையை காதில் போட்டுக் கொண்டது போல தெரியவில்லை.
விவசாயிகளுக்குத் தேவையான தண்ணீரை திறந்து விடக் கோரி கர்நாடக அரசுக்கு தமிழக அரசு சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வ கடிதம்எதுவும் அனுப்பப்படவில்லை. மத்திய அரசை வலியுறுத்தி எந்தத் தகவல் தொடர்பும் இல்லை.
குமுறலும், கொந்தளிப்பும், ஏமாற்றமுமாக உள்ள விவசாயிகளைச் சந்திக்க குறைந்தபட்சம் மாவட்ட ஆட்சித் தலைவர் கூட செல்லவில்லை.அரசு நிர்வாகம் மயான அமைதி காத்து வருகிறது.
இதுவே கர்நாடகப் பகுதியில் விவசாயிகளுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் அந்த மாநிலத்தின் அத்தனை கட்சிகளும் ஒன்று சேர்ந்துபோராட்டம் நடத்தியிருக்கும். முதல்வர் அலுவலகத்தையே முற்றுகையிட்டிருப்பார்கள். அரசு அலுவலங்களை முற்றுகையிட்டு அங்கேயேசமைத்து சாப்பிட்டு போராட்டம் நடத்தி அரசைக் கதி கலங்க வைத்திருக்கிறார்கள் அம் மாநில விவசாயிகள்.
ஆனால் அப்பாவி தமிழக விவசாயிகள் அப்படியெல்லாம் செய்ய மாட்டார்கள் என்பதால் அரசு அலட்சியமாக இருந்து வருகிறது.
தனது மக்களைக் காக்க வேண்டிய அரசே, இப்படி மெளனமாக இருந்தால் எப்படி?
இந்தப் பிரச்சினை தொடர்பாக தலையிட வேண்டியவர் பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ள ஓ.பன்னீர் செல்வம்தான். ஆனால்அவரோ சைதை தொகுதி இடைத் தேர்தல் பொறுப்பாளராக போய் விட்டார். தேர்தல் முடிந்த பிறகும் கூட அவர் பிசியாகவே உள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் புகார்களுக்கு பதில் அளிப்பதும், புதுப் புகார்களைக் கூறுவதுமாக அவர் இருக்கிறார். இந் நிலையில்விவசாயிகள் நிலைதான் ரொம்பப் பரிதாபமாக உள்ளது.
விவசாயிகளின் பொறுமை கொஞ்ச காலத்திற்குத்தான் நீடிக்கும். அதன் பிறகு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு விட்டால் அதனால்பாதிப்பு அரசுக்கும், பொதுமக்களுக்கும்தான்.
எனவே உடனடியாக அரசு தலையிட்டு, காவிரி நீரில் தமிழக விவசாயிகளின் பங்கைக் கேட்டுப் பெறத் தேவையான நடவடிக்கையைமேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.
இல்லாவிட்டால் பட்டினிச் சாவுகளையும், ஆந்திராவில் நடப்பது போன்ற விவசாயிகள் தற்கொலைகளையும் தான் சந்திக்க வேண்டியஅபாயகரமான நிலை ஏற்படும்.