ஓட்டிப் பார்ப்பதாக கூறி காரை "ஓட்டிச் சென்றவர்"
சென்னை:
சென்னை கோடம்பாக்கத்தில் டாடா குவாலிஸ் காரை ஓட்டிப் பார்ப்பதாக கூறி வாங்கிய நபர் அந்தக் காருடன் தலைமறைவாகி விட்டார்.
கோடம்பாக்கம் சிவன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ராஜு. தனது டாடா குவாலிஸ் காரை விற்க முடிவு செய்த ராஜு இதுதொடர்பாகபத்திரிக்கைகளில் விளம்பரம் செய்திருந்தார். அதைப் பார்த்து ஒருவர் காரை வாங்க வந்தார்.
காரை ஓட்டிப் பார்த்த பிறகே வாங்க விரும்புவதாக அந்த நபர் கூறியுள்ளார். சரி என்று கூறிய ராஜு, கார் சாவியை அவரிடம் கொடுத்துவிட்டு தானும் காரில் அமர்ந்தார். அங்கிருந்து இருவரும் கிளம்பினர்.
மதுரவாயல் அருகே வந்ததும் கொஞ்சம் டீ சாப்பிட்டு விட்டு போகலாம் என்று அந்த நபர் கூறியுள்ளார். அதற்கு சரி என்ற ராஜுகாரிலிருந்து இறங்கினார். அவர் இறங்கி அடுத்த நொடியே காரை ஓட்டி வந்த "கில்மா" நபர் காருடன் பறந்து விட்டார்.
காரை விற்க நினைத்து அதை பறிகொடுத்த ராஜு, மதுரவாயல் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.