எங்கு கையை நீட்டினாலும் நிற்கும் பஸ்கள்: சென்னையில் அறிமுகம்
சென்னை:
சென்னையில் எங்கு வேண்டுமானாலும் நிறுத்தி, ஏறிக் கொள்ளும் வகையில் புதிய பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னையில் அரசு பஸ்கள் மிகக் கறாராக இயங்கி வருவதால் மக்கள் தனியார் வேன்களை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். பஸ்டிரைவர்கள், கண்டக்டர்களின் ஓவர் பேச்சும் செயலும் மக்களை எரிச்சல்படுத்தியுள்ளன.
மேலும் பஸ் கட்டணமும் அசுர வேகத்தில் உயர்ந்துள்ளதால் தனியார் வேன்களைத் தான் சென்னை மக்கள் நாடி வருகிறார்கள். இதனால் பலரூட்களில் அரசு பஸ்கள் காலியாக ஓடிக் கொண்டிருக்கின்றன. மேலும் ஷேர் ஆட்டோக்கள் வேறு வந்து விட்டதால் அரசு பஸ்களுக்குவருமான இழப்பும் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மக்களைக் கவருவதற்காக புதிய யுக்தியை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் கடைப்பிடிக்க உள்ளது. இதன்படிதனியார் வேன்களைப் போலவே எங்கு வேண்டுமானாலும் நிறுத்தி, ஏற்றிக் கொள்ளும் வகையிலான பஸ்களை அறிமுகப்படுத்துகிறார்கள்.
முதலில் சோதனைரீதியாக 5 ரூட்களில் இந்த வகை பஸ்கள் ஓடவுள்ளன. இது வெற்றி பெற்றால் நகர் முழுவதும் இந்த சேவைவிரிவுபடுத்தப்படுமாம்.
வேளச்சேரி- மேடவாக்கம், வேளச்சேரி- செயின்ட் தாமஸ் மலை ரயிலடி, திருவான்மியூர்- பல்லவன் காலனி, தாம்பரம்- முடிச்சூர்,அமைந்தகரை- பூந்தமல்லி ஆகிய ரூட்களில் இந்த புதிய வகை பஸ்கள் விடப்படுகின்றன.
இந்த ரூட்களில்தான் அதிக அளவில் தனியார் வேன்கள் சேவை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கண்டக்டர்கள் தெனாவட்டாக சீட்டில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்து கொண்டு டிக்கெட் கொடுப்பதை நிறுத்தி,உரிய நேரத்தில் பஸ்களை கிளம்பி, வழியில் செக்கிங் என்ற பெயரிலும், டிக்கெட் போடுகிறேன் என்ற பெயரிலும் மரத்தடியில் நிறுத்திகாலதாமதம் செய்யாமல், நல்ல முறையில் பஸ்களை இயக்கினால் தான் மக்கள் அரசு பஸ்களை இனி நாடுவார்கள்.