காவிரியில் தண்ணீர் விடக் கோரி திமுக விவசாய அணி டெல்லி- கர்நாடகம் பயணம்
சென்னை:
காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கோரி திமுக விவசாய அணித் தலைவர்கள் பிரதமர் வாஜ்பாயையும் கர்நாடகமுதல்வர் கிருஷ்ணாவையும் சந்தித்து வலியுறுத்தத் திட்டமிட்டுள்ளனர்.
காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடகம் மறுத்து வருவதால் மேட்டூர் அணையும் வறண்டு வருகிறது. தஞ்சை,நாகப்பட்டிணம் போன்ற மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள குறுவைப் பயிறுக்கு தண்ணீர் திறந்துவிடும் அளவுக்குமேட்டூரில் நீர் இல்லை.
இதனால் வங்கிகளில் கடன் வாங்கியும், நாற்றை கடனாக வாங்கியும் நட்டு வைத்துள்ள விவசாயிகள் வயிற்றில்நெருப்பைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்துள்ளனர்.
தண்ணீர் வராவிட்டால் பயிர்கள் காய்ந்துவிடும் நிலை உருவாகியுள்ளது. காவிரியில் நீர் விடக் கோரியும் தமிழகஅரசு இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும் தஞ்சை மாவட்டத்திலும் சுற்றுப் பகுதி காவிரிபாசன மாவட்டங்களிலும் விவசாயிகள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
ஆனால், செவிடன் காதில் ஊதிய சங்கு மாதிரி இந்த போராட்டங்களுக்கு எந்தப் பலனும் ஏற்படவில்லை.
தமிழக முதல்வர் ஜெயலலிதா டெல்லியில் பிரதமர் வாஜ்பாயிடம் காவிரி நீரைத் திறந்துவிடுமாறு கர்நாடகத்தைவலியுறுத்தக் கோரினார். ஆனால், அதை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.
இந் நிலையில் ஜனநாயக வாலிபர் இயக்கத்தினர் தஞ்சாவூரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திமுகவின் விவசாய அணித் தலைவர் கே.பி. ராமலிங்கம் டெல்லியில் பிரதமர் வாஜ்பாயையும் கர்நாடகம் சென்றுமுதல்வர் கிருஷ்ணாவையும் சந்திக்க உள்ளார்.