ஸ்டாலின் பதவி விலக கோர்ட் தீர்ப்பு
சென்னை:
மு.க.ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) முதல் தனது சென்னை மேயர் பதவியை இழக்கிறார்.
தமிழக அரசு கொண்டு வந்த ஒரு நபர் ஒரு பதவி சட்டத்திற்கு இடைக் கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டதால் ஸ்டாலினின் மேயர் பதவி காலியானது. இந்தத் தீர்ப்பையடுத்து அவரது பதவியைப் பறித்து அரசு இன்று உத்தரவிபிறப்பிக்கும் என்று தெரிகிறது.
அதே நேரத்தில் அடுத்த மேயரைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால், ஸ்டாலினுக்குபதிலாக அடுத்த மேயரைத் தேர்வு செய்ய முடியாத நிலைக்கு முதல்வர் ஜெயலலிதா தள்ளப்பட்டுள்ளார்.
தமிழக அரசு கொண்டு வந்த ஒருவருக்கு ஒரு பதவி என்ற சட்டத்தை ஏற்று தனது பதவியை ராஜினாமா செய்ய ஸ்டாலின்மறுத்தார். அரசே தனது எந்தப் பதவியை வேண்டுமானாலும் பறித்துக் கொள்ளட்டும் என்று அறிவித்தார்.
இந் நிலையில் இந்தச் சட்டத்தை எதிர்த்து உதயகுமார் என்ற வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவருக்குவழக்கறிஞர் விஜயன் ஆஜரானார். இந்தச் சட்டம் ஸ்டாலினை குறி வைத்து கொண்டு வரப்பட்டது, முன் தேதியிட்டுஅமல்படுத்தப்படுவதால் ஏற்கனவே பதவியில் இருப்பவர்களின் பதவியைப் பறிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என விஜயன்வாதாடினார்.
இந்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் விஜயன் கோரினார்.
நீண்ட வாத- பிரதிவாதங்களுக்கு பின் இந்த வழக்கில் நேற்று மாலை தீர்ப்பளிக்கப்பட்டது.
ஆனால், தமிழக அரசு கொண்டு வந்த இந்தச் சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க நீதிபதிகள் சுபாஷன் ரெட்டி, முருகேசன்ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச் மறுத்து விட்டது. இதனால் ஸ்டாலினின் பதவியைப் பறிக்க தமிழக அரசுக்கு எந்தத்தடையும் இல்லை.
தமிழக அரசுக்கும் ஆப்பு:
அதே சமயம், மேயர் பதவி பறிபோவதால் உண்டாகும் காலியிடத்திற்கு மறு உத்தரவு வரும் வரை தேர்தல் நடத்த கோர்ட் தடைவிதித்துள்ளது.
இந்த வழக்கை முழுமையாக விசாரித்து முடிக்கும் வரை மேயர் பதவிக்கு தேர்தல் நடத்தக் கூடாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
அரசியல் சட்டத்தின்படிதான் ஒரு அரசு செயல்பட வேண்டும். அதிலிருந்து விலகிச் செல்லும் வகையில் சட்டம் இயற்றவோ,சட்டங்களில் திருத்தம் செய்யவோ கூடாது என்றும் நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்புக்குப் பின்னர் தான் மேயர்தேர்தலை நடத்த முடியும் என்ற நிலைக்கு தமிழக அரசு தள்ளப்பட்டுள்ளது.
இதையடுத்து துணை மேயர் கராத்தே தியாகராஜனே மேயர் பொறுப்பை தற்காலிகமாக வகிக்கவுள்ளார். வழக்கில் இறுதித் தீர்ப்புவரும் வரை தியாகராஜனே மேயராக செயல்படுவார்.