ரெளடித்தனம் செய்பவர் மேயராவதா? இளங்கோவன் கேள்வி
சென்னை:
கராத்தே தியாகராஜன் போன்ற ரெளடித்தனம் செய்பவர்கள், கட்டப் பஞ்சாயத்து ஆசாமிகள் மேயர் பொறுப்புக்குவருவது மிக மோசமான முன் உதாரணமாகும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
நிருபர்களிடம் பேசிய அவர்,
காவிரியில் கர்நாடகம் தண்ணீர் விடாததால் மேட்டூர் அணை வறண்டு போய்விட்டதாகக் கூறி விவசாயிகளுக்குநீரைத் திறந்துவிட இயலாத நிலையில் உள்ளதாகச் சொல்லும் தமிழக அரசு அதைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
காவிரியில் நீர் விடக் கோரி கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவை முதல்வர் ஜெயலலிதா சந்தித்துப் பேச வேண்டும்.இது ஒரு மாநிலம் தொடர்பான பிரச்சனை. இதில் முதல்வர் தலையிட்டால் தான் தீர்வு கிடைக்கும்.
எல்லோரையும் அரவணைத்து, அன்புடன் நடந்து இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.
கராத்தே தியாகராஜனைப் போன்ற ஒருவர் மேயர் பொறுப்புக்கு வந்துள்ளதன் மூலம் ரெளடிகள், கட்டப்பஞ்சாயத்து, அடாவடி பேர்வழிகளும் இனிமேல் மேயராகலாம் என்ற தவறான முன் உதாரணம் ஏற்பட்டுவிட்டது.
இது மாநகராட்சிக்கும் மக்களுக்கும் நல்லதல்ல. அவரை மேயர் பொறுப்புக்கு வரச் செய்வதன் மூலம் மிகமோசமான, தவறான முன் உதாரணம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்டாலின் பதவிப் பறிப்பை எதிர்த்து கைது செய்யப்பட்ட திமுகவினர் அனைவரையும் உடனடியாக விடுவிக்கவேண்டும்.
காங்கிரஸ்- த.மா.கா. இணைந்தால் யாருக்கு என்ன பதவி தருவது என்பது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி முடிவு செய்வார் என்றார் இளங்கோவன்.