""யாரிடமும் விலை போக மாட்டேன்"": சரத்குமார்
சென்னை:
எதிர்க் கட்சியினர் என்னைச் சீண்டிப் பார்க்க வேண்டாம். நான் யாரிடமும் விலை போக மாட்டேன். திமுகவில்தான் இருக்கிறேன், அதில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்று அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பியும்நடிகருமான சரத்குமார் கூறினார்.
இதுகுறித்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த 1998ல் தான் நான் திமுகவில் உறுப்பினராகச் சேர்ந்தாலும் 1996லிருந்தே இன்று வரை கட்சிக்காக அயராதுஉழைத்து வருகிறேன்.
நான் எப்போதுமே முன் வைத்த காலை பின் வைக்க மாட்டேன். இன்னும் நான் திமுகவில் தான் இருக்கிறேன்.அதில் எந்த விதமான மாற்றமும் இல்லை.
சமீபத்தில் நடந்த இடைத் தேர்தலின் போது நான் பிரச்சாரம் செய்ய வராதது குறித்து என்னிடம் விளக்கம் கேட்கவேண்டும் என்று திமுக தொண்டர்களே கட்சித் தலைமைக்குக் கடிதம் எழுதியிருப்பதாகக் கூறப்பட்டது. இதற்குநான் பதிலளிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் ஒரு தெலுங்குப் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் என்னுடைய கழுத்துஎலும்பு நொறுங்கி விட்டது. அதற்காக இடுப்பு பகுதியிலிருந்து ஒரு எலும்பு எடுத்து கழுத்துப் பகுதியில்பொருத்தப்பட்டது.
இந்நிலையில் "தென்காசிப் பட்டணம்" படப்பிடிப்பின் போது ஒரு காட்சியில் நான் நெப்போலியனைச் சுமக்கும்காட்சியில் இடுப்பு பகுதியில் வலி அதிகரித்துக் கொண்டே இருந்தது.
இதனால் நான் லண்டன் சென்று சிகிச்சை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அங்குள்ள டாக்டர் ஜெயின்என்பவரிடம் இப்போதே "அப்பாய்ன்ட்மெண்ட்" வாங்கா விட்டால் அடுத்த ஆறு மாதத்துக்கு நான் சிகிச்சை பெறமுடியாது.
அதனால் தான் இடைத் தேர்தலின் போது சிகிச்சைக்காக நான் லண்டன் சென்று விட்டேன். தேர்தல் பிரச்சாரத்திலும்கலந்து கொள்ள முடியவில்லை.
ஆனால் எதிர்க் கட்சியினர் சதி செய்து நான் திமுகவிலிருந்து விலகப் போவதாகக் கூறி கட்சிக்குள் குழப்பத்தைஏற்படுத்த முனைகிறார்கள். இதனால் என்னை வேதனையடையச் செய்யவும் அவர்கள் முயற்சிக்கின்றனர்.
நான் யாரிடமும் விலை போக மாட்டேன். திமுகவுக்காக நான் என் உயிரைக் கொடுக்கவும் தயார். எதிர்க்கட்சியினர் என்னை வீணாகச் சீண்டிப் பார்க்க வேண்டாம் என்றார் சரத்குமார்.