காரை கடத்த முயற்சி: போலீசாரிடம் சிக்கியவன் சயனைட் அருந்தி தற்கொலை- 2 பேர் சிக்கினர்
தர்மபுரி:
சேலத்தில் டாக்சியை வாடகைக்கு எடுத்து அதைக் கடத்தச் செல்ல முயற்சி நடந்தது. இந்தக் கும்பலை போலீசார்மடக்கியபோது ஒருவர் சயனைட் அருந்தி உயிரை விட்டார். இதனால் இங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்றிரவு 5 பேர் கொண்ட கும்பல் சேலத்தில் உள்ள ஒரு தனியார் டிராவல்ஸ் நிறுவனத்துக்கு வந்தது. அவர்கள்பெங்களூர் செல்வதற்கு டாக்சி வேண்டும் என்று கேட்டனர்.
இதையடுத்து அட்வான்ஸ் தொகையாக சில நூறுகளை வாங்கிக் கொண்டு தனது டிரைவருடன் டாக்சியை அனுப்பிவைத்தார் அதன் உரிமையாளர்.
அந்த டாக்சி தர்மபுரி அருகே வந்தபோது காரை நிறுத்துமாறு அந்தக் கும்பல் டிரைவரிடம் கூறியது.
இதையடுத்து அவர் காரை நிறுத்தினார். உடனே அந்த 5 பேரும் டிரைவரை அடித்து உதைத்தனர். இதில் அவர்மயக்கமடைந்தார். உடனே அவரை சாலையோரம் தூக்கிப் போட்டுவிட்டு காரை எடுத்துக் கொண்டு தப்பினர்.
சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து சுதாரித்துக் கொண்ட அந்த டிரைவர் உடனே அருகில் இருந்த காவல்நிலையத்துக்குத் தகவல் தந்தார். இதையடுத்து அந்தக் காரை மடக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர்.
பெங்களூர் நெடுஞ்சாலையில் பல இடங்களில் சோதனைச் சாவடிகள் உள்ளன. இந்த அனைத்து சோதனைச்சாவடிகளுக்கும் இந்த கார் குறித்த தகவல் தரப்பட்டது. இதையடுத்து அனைத்து சோதனைச் சாவடிகளிலும்போலீசார் உஷாராயினர்.
இந் நிலையில் அந்தக் கார் பாலக்கோடு அருகே உள்ள மகேந்திரபாளையம் என்ற இடத்துக்கு வந்தது. உடனேஅந்தக் காரை அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர்.
போலீசாரைக் கண்டவுடன் அந்தக் கும்பல் காரிலிருந்து இறங்கி அருகில் உள்ள காட்டுப் பகுதியில் ஓடியது.அவர்களை போலீசார் விரட்டிச் சென்றனர். துப்பாக்கிகளைக் காட்டி சுட்டுவிடுவோம் என்று எச்சரித்தனர்.
ஆனால், அந்தக் கும்பல் தொடர்ந்து இருட்டில் ஓடியது. போலீசாரும் விடாமல் துரத்திச் சென்றனர். இதில் 2 பேர்போலீசாரிடம் சிக்கினர்.
இன்னொருவன் போலீசாரிடம் சிக்கிவிடாமல் இருக்க சயனைட் விஷத்தை அருந்தி அந்த இடத்திலேயே உயிர்விட்டான். அவனைக் காப்பாற்ற போலீசார் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.
மற்ற இருவரும் அந்தக் காட்டுப் பகுதியில் இருட்டில் ஓடி தப்பிவிட்டனர்.
பிடிபட்ட 2 பேரிடமும் விசாரனை நடத்தியதில் அவர்கள் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தைச் சேர்ந்தவர்கள்என்று தெரியவந்தது.
சயனைட் அருந்தி உயிரைவிட்டவன் பெயர் சிராஜூதீன் என்றும் தெரியவந்துள்ளது. இவனது உடல் தர்மபுரி அரசுமருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு அவனது உடல் இன்று போஸ்ட்மார்ட்டம் செய்யப்படும்.
தப்பியோடிய இருவரையும் பிடிக்க தனிப் போலீஸ் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சயனைட் அருந்தி உயிரைவிட்டுள்ளதால் இக் கும்பல் மீது பலவித சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன. இவர்கள்தீவிரவாதக் கும்பலாக இருக்கலாம் என்றும் போலீசார் கூறுகின்றனர்.
பிடிபட்ட இருவரிடமும உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.