வீரப்பன் - வாஸ்து: வீட்டை இடித்தார் ராஜ்குமார்
தாளவாடி:
வீரப்பன் நடமாட்டம் நிறைந்த காட்டுப் பகுதியில் உள்ள தனது பண்ணை வீட்டை கன்னட நடிகர் ராஜ்குமார் இடித்துத் தள்ளிவிட்டார். இந்தவீட்டில் இருந்து தான் ராஜ்குமார் கடத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தர்மபுரி மாவட்டம் தாளவாடி அருகே உள்ள தொட்டகாஜனூர். அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ள தனது பூர்வீக வீட்டுக்கு அருகே ஏக்கர்கணக்கில் நிலம் வாங்கி பண்ணையை அமைத்தார் ராஜ்குமார். பின்னர் இந்தப் பண்ணையின் நடுவே மிகப் பெரிய வீட்டைக் கட்டினார்.
ஓய்வு கிடைக்கும் நேரத்தில் தனது குடும்பத்துடன் அவர் இங்கு வந்து தங்குவது வழக்கம். இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவ்வாறு தனதுகுடும்பத்தினருடன் இங்கு அவர் தங்கியிருந்தபோது தான் வீரப்பனிடம் சிக்கினார்.
இரவு நேரத்தில் இந்த வீட்டுக்குள் புகுந்த வீரப்பன் அவரைக் கடத்திச் சென்றான்.
அவனிடம் இருந்து விடுதலையான பின்னர் இந்தப் பகுதிக்கே ராஜ்குமார் வரவில்லை. இந் நிலையில் இந்த பண்ணை வீடு வாஸ்துசாஸ்திரப்படி கட்டப்படாததால் தான் கடத்தல் சம்பவமே நடந்ததாக ராஜ்குமாரின் ஜோதிடர் கூறியுள்ளார். அந்த வீட்டை உடைத்துத்தள்ளவும் ஜோதிடர் அறிவுறுத்தினார்.
இதையடுத்து அந்த மிகப் பெரிய வீடு இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. அதற்கு எதிரே வாஸ்து சாஸ்திரப்படி ஒரு வீடுகட்டப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications