ராகிங்கை தடுக்காத கல்லூரிகளுக்கு தம்பித்துரை கடும் எச்சரிக்கை
சென்னை:
தமிழகத்தில் ராகிங்கைத் தடுக்கத் தவறிய கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று கல்வி அமைச்சர்தம்பித்துரை எச்சரித்தார்.
திருச்சி பெரியார் கல்லூரியில் நேற்று ஒரு மாணவரை ராகிங் செய்தவர்களைத் தட்டிக் கேட்ட ஒருவர் கத்தியால்குத்திக் கொல்லப்பட்டார். இந்தக் கொலைச் சம்பவம் திருச்சியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும்ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கான கவுன்சலிங் இன்று காலை தொடங்கியது. இந்தகவுன்சலிங்கைத் தொடங்கி வைத்த தம்பித்துரை பின்னர் நிருபர்களிடம் கூறுகையில்,
திருச்சியில் ராகிங்கைத் தட்டிக் கேட்டவர் கொலை செய்யப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.
இது தொடர்பாக பெரியார் கல்லூரியின் முதல்வர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகக் கல்வித்துறை இயக்குநர்என்னிடம் கூறினார்.
இது போன்று ராகிங் மற்றும் ஈவ் டீசிங் ஆகிய சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதே போல் இது போன்ற சம்பவங்களைத் தடுக்கத் தவறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீதும் கடுமையானநடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தச் சம்பவங்களுக்கு குறிப்பிட்ட அந்தப் பள்ளியும் கல்லூரியும் தான் காரணம் என்று நான் சொல்வேன்.ராகிங்கையும் ஈவ் டீசிங்கையும் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அந்தக் கல்வி நிறுவனங்கள் தான்எடுக்க வேண்டும்.
அவ்வாறு நடவடிக்கைகள் எடுக்கத் தவறினால் குறிப்பிட்ட பள்ளி மற்றும் கல்லூரியின் அங்கீகாரம் ரத்துசெய்யப்படும் என்று எச்சரித்தார் தம்பித்துரை.