திருச்சி ராகிங் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது
திருச்சி:
திருச்சி பெரியார் கல்லூரியில் ராகிங் செய்தவர்களைக் கண்டித்த மாணவர் கொலை தொடர்பாக மேலும் ஒருமாணவர் கைது செய்யப்பட்டார்.
திருச்சியில் உள்ள ஈ.வே.ரா. பெரியார் அரசு கலைக் கல்லூரியில் புதிதாகச் சேர்ந்த ரமேஷ் என்ற மாணவரை கடந்தபுதன்கிழமை சிலர் ராகிங் செய்தனர்.
இதைக் கேள்விப்பட்டு அங்கு வந்த ரமேஷின் பெரியப்பா மகனான அழகர்சாமியை ராகிங் செய்த மாணவர்கள்கத்தியால் குத்திக் கொன்று விட்டனர். அழகர்சாமியும் இதே கல்லூரியில் தான் படித்து வந்தார்.
திருச்சியையே உலுக்கிய இந்தப் படுகொலைச் சம்பவம் தொடர்பாக பிரதீப் மற்றும் ஆனந்தகுமார் ஆகியஇருவரையும் போலீசார் உடனடியாகக் கைது செய்தனர்.
இந்நிலையில் இது தொடர்பாக நேற்று (வியாழக்கிழமை) ஆறுமுகம் என்ற மற்றொரு மாணவரும் கைதுசெய்யப்பட்டார்.
கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் கல்லூரித் தேர்தல் தொடர்பாக அழகர்சாமிக்கும் ஆறுமுகத்திற்கும் முன் விரோதம்இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தான் ராகிங் பிரச்சனையின் போது அழகர்சாமியை ஆறுமுகமும்கூலிப்படையைச் சேர்ந்த வேறு சிலரும் சேர்ந்து கத்தியால் குத்திக் கொன்று விட்டனர்.
இந்நிலையில் அழகர்சாமி கொலையில் தொடர்புடைய செல்வகுமார் என்ற மாணவர் உள்ளிட்ட கூலிப்படையைச்சேர்ந்தவர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே அழகர்சாமியைக் கொலை செய்த கூலிப் படையினர் அனைவரையும் கைது செய்யாவிட்டால் வரும்29ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய மாணவர் சங்கம் அறிவித்துள்ளது.