தீவிரவாதிகள் ஊடுருவல் இல்லை: பாவெல் "பல்டி"
இஸ்லாமாபாத்:
இந்தியாவுக்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவல் குறைந்து விட்டது என்று பாகிஸ்தானுக்கு வந்தஅமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவெல் திடீர் "பல்டி" அடித்தார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றத்தைத் தணிப்பதற்காக கடந்த சனிக்கிழமை தன்னுடையதெற்காசியப் பயணத்தைப் பாவெல் துவக்கினார்.
சனிக்கிழமை மாலை டெல்லி வந்த பாவெல் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவைச்சந்தித்துப் பேசினார். பின்னர் நேற்று பிரதமர் வாஜ்பாய், துணைப் பிரதமர் அத்வானி மற்றும் பாதுகாப்புத்துறைஆலோசகர் பிரஜேஷ் மிஸ்ரா ஆகியோரையும் சந்தித்தார்.
அப்போது பேசும் போதெல்லாம் பாகிஸ்தானிலிருந்து காஷ்மீர் வழியாக இந்தியாவுக்குள் தீவிரவாதிகள்ஊடுருவுவது இன்னும் நிற்கவில்லை என்று கூறிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று பிற்பகல் பாகிஸ்தானுக்கு வந்த பாவெல் அந்நாட்டு ராணுவ ஆட்சியாளரான பர்வேஸ்முஷாரப்பை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
அப்போது இந்தியாவுக்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவல் குறைந்து விட்டதாகவும் இதனால் இருநாடுகளும் உடனடியாகப் பேச்சுவார்த்தைகளைத் துவக்க வேண்டும் என்றும் பாவெல் கூறினார்.
பாவெல்லின் இந்த "பல்டி" இந்தியாவுக்குப் பெரும் அதிர்ச்சி ஒன்றையும் அளிக்கவில்லை. ஏனென்றால்தெற்காசியாவுக்கு வரும் அனைத்து அமெரிக்கத் தலைவர்களும் தொடர்ந்து இந்தியாவில் ஒன்றைப் பேசி விட்டுமுஷாரப்பிடம் பேசும் போது அப்படியே தலைகீழாகப் பேசி வருகின்றனர்.
கடந்த முறை பாவெல் இங்கு பயணம் செய்த போதும் கூட இவ்வாறு தான் "பல்டி" அடித்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று முஷாரப்பும் இந்தியாவுக்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவல் தற்போது இல்லைஎன்றும் எனவே பேச்சுவார்த்தை நடத்த முன் வர வேண்டும் என்றும் இந்தியாவுக்கு அழைப்பு விடுத்தார்.
ஆனால் முஷாரப்பின் அழைப்பை இந்தியா நிராகரித்து விட்டது. முஷாரப் சொல்வதெல்லாம் பொய். இன்னும்தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவிக் கொண்டு தான் உள்ளனர் என்று வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் மறுப்பு தெரிவித்தார்.
இதற்கிடையே முன்னதாக காஷ்மீர் தேர்தலுக்கு சர்வதேசப் பார்வையாளர்களை நியமிக்க வேண்டும் என்றபாவெல்லின் கோரிக்கையையும் இந்தியா நிராகரித்து விட்டது.
இத்தனை ஆண்டுகள் காஷ்மீர் தேர்தலின் போது சர்வதேசப் பார்வையாளர்கள் யாரும் வரவில்லை. எனவேஇப்போதும் அதற்கு அவசியமில்லை என்று இந்தியா உடனடியாகப் பாவெல்லுக்குப் பதிலளித்து விட்டது.
பாகிஸ்தானில் தன்னைத் தவிர யாரும் அரசியல் செய்யக் கூடாது என்று முஷாரப் போட்டுவரும் கட்டுப்பாடுகளை அமெரிக்காகண்டித்துள்ளது. பெனாசிர், நவாஸ் ஷெரீப் போன்ற தலைவர்களின் கட்சிகளையும் நடக்கவுள்ள தேர்தலில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்என முஷாரபை அமெரிக்கா நெருக்கி வருகிறது.