மத்திய கூட்டணியில் இருந்து மம்தா விலகல்?
கொல்கத்தா:
மத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து மம்தா பானர்ஜி மீண்டும் வெளியேறுவார் என்று தெரிகிறது. மத்தியஅரசாங்கத்தில் துணைப் பிரதமர் அத்வானியால் பிரதமர் வாஜ்பாய் ஓரம்கட்டப்படுவதாகவும் மம்தா கூறியுள்ளார்
கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு அமைந்துள்ள கிழக்கு ரயில்வேயைப் பிரித்து பிகாரில் உள்ள ஹாஜிபூரைத்தலைமையகமாகக் கொண்டு புதிய ரயில்வே மண்டலம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதை மம்தா பானர்ஜி எதிர்த்துவருகிறார்.
இதைக் காரணம் காட்டித் தான் சமீபத்தில் அமைச்சரவை விரிவாக்கத்தின்போது அதில் சேர மம்தா மறுத்தார்.
ஜார்ஜ் பெர்னாண்டசின் சமதா கட்சியைச் சேர்ந்த நிதிஷ்குமார் பிகாரைச் சேர்ந்தவர் என்பதால் கொல்கத்தா மண்டலத்தைப் பிரித்துபிகாரில் புதிய மண்டலம் அமைக்க அவர் திட்டமிடுவதாக பானர்ஜி கூறி வருகிறார்.
அவரது எதிர்ப்பால் இந்தத் திட்டத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. ஆனால், இரு தினங்களுக்கு முன் கூடிய மத்தியஅமைச்சரவைக் கூட்டத்தில் ரயில்வே மண்டலத்தைப் பிரிப்பது என்று இறுதி முடிவெடுக்கப்பட்டது.
இந்த முடிவு எடுக்கப்பட்டதற்கு அத்வானி தான் காரணம் என மம்தா குற்றம் சாட்டியுள்ளார். ஆட்சியில் பிரதமர் வாஜ்பாய்ஓரம்கட்டப்படுகிறார். அவரை ஒதுக்கிவிட்டு அத்வானி தான் முக்கிய முடிவுகளை எடுக்கிறார். வாஜ்பாயை யாரும்மதிப்பதில்லை. இதைச் சுட்டிக் காட்டும் தைரியம் எனது கட்சிக்கு மட்டும் தான் உள்ளது எனவும் மம்தா கூறியுள்ளார்.
இந் நிலையில் அவரது திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று கூடுகிறது. அதில், தேசிய ஜனநாயகக்கூட்டணியைவிட்டு வெளியேறுவது குறித்து மம்தா பானர்ஜி முடிவு செய்வார்.