சிறுமி பிணத்தின் தலையை வெட்டி பூஜை: 2 மந்திரவாதிகள் கைது
கந்தர்வக்கோட்டை:
சுடுகாட்டில் புதைக்கப்பட்ட சிறுமியின் பிணத்தைத் தோண்டி எடுத்து தலையை வெட்டி பூஜை செய்த 2 மந்திரவாதிகளைப் போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையை அடுத்த பந்துவாக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தங்கப்பாவின் மகள் அகிலா. ஐந்து வயதுச் சிறுமியான அவள் அங்குள்ள ஒரு பள்ளிக் கூடத்தில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தாள்.
சமீபத்தில் பள்ளிக்குச் சென்ற அகிலா, வழியில் இருந்த ஒரு தடுப்புச் சுவர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்து இறந்தாள். நீண்ட நேரத் தேடுதலுக்குப் பின் கிணற்றில் பிணமாக மிதந்த அவளுடைய உடலை தங்கப்பாவும் உறவினர்களும் மீட்டு அருகிலுள்ள ஒரு சுடுகாட்டில் அவளுடைய உடலைப் புதைத்தனர்.
இந்நிலையில் நேற்று அந்த உடல் புதைக்கப்பட்ட சமாதியில் பால் ஊற்றி சடங்கு செய்வதற்காக தங்கப்பாவும் அவருடைய உறவினர்களும் சென்றனர். ஆனால் அங்கே அகிலாவின் உடல் தோண்டப்பட்டு, தலை துண்டிக்கப்பட்ட நிலையில் அவளுடைய உடம்பு மட்டும் வெளியே கிடந்ததைக் கண்டு அனைவரும் அதிர்ந்தனர்.
பின்னர் போலீசாருக்கு அவர்கள் கொடுத்து விட்டுத் தலையைத் தேடிய போது, அருகில் உள்ள ஒரு புளிய மரத்தில் அகிலாவின் தலை தொங்கிக் கொண்டிருப்பது தெரிய வந்தது. அருகில் பூ, முட்டை, வெற்றிலை-பாக்கு, ஊதுபத்தி, பழம், கற்பூரம் ஆகியவை கிடந்தன.
இதையடுத்து யாரோ அகிலாவின் தலையை வெட்டி பூஜை செய்துள்ளனர் என்பது தெரிய வந்தது. அதே ஊரிலேயே இருக்கும் மந்திரவாதி குழந்தைவேல் தான் இதைச் செய்திருக்க வேண்டும் என்று ஊகித்தனர்.
இதையடுத்து ஊர் மக்கள் திரண்டு போய் குழந்தைவேலிடம் விசாரித்தனர். இதற்குள் போலீசாரும் அங்கு வந்து விட்டனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அகிலாவின் தலையை வெட்டி பூஜை செய்ததை குழந்தைவேல் ஒப்புக் கொண்டார். அவருக்கு அவருடைய மகன் கனகராஜும் உதவியிருந்தார்.
சில ஆண்டுகளுக்கு முன் கனகராஜின் மனைவி அவரை விட்டுப் பிரிந்து சென்று விட்டதாகவும், அவர் மீண்டும் வீடு திரும்ப வேண்டுமென்றால் யாருக்காவது பிறந்த முதல் பெண் குழந்தையின் தலையை வெட்டி சுடுகாட்டில் நள்ளிரவு பூஜை நடத்த வேண்டும் என்றும் அவரிடம் குழந்தைவேல் கூறியுள்ளார்.
இந்த நிலையில் தங்கப்பாவின் மூத்த பெண் அகிலா கிணற்றில் தவறி விழுந்து இறந்த செய்தி இவர்களுக்குக் கிடைத்தது. இதையடுத்து அன்று இரவே அவளுடைய பிணத்தைத் தோண்டி எடுத்து தலையை மட்டும் வெட்டி கனகராஜ் பூஜை செய்துள்ளார்.
பின்னர் 2 மணி நேரம் பூஜை முடிந்தவுடன் அகிலாவின் தலையை புளியமரத்தில் கட்டித் தொங்க விட்டு கனகராஜ் வீட்டுக்குச் சென்று விட்டார்.
நெஞ்சைப் பதற வைக்கும் இந்தக் கொடும் சம்பவத்தால் அதிர்ந்து போயுள்ள அந்தக் கிராமத்தினர் கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். தன் பெற்றோருக்கு அகிலா ஒரே மகள் என்பது குறிப்பிடத்தக்கது.