வருமானத்தை மீறி சொத்து குவித்த வழக்கு: ஹரிபாஸ்கர் விடுதலை
சென்னை:
வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஹரிபாஸ்கர் விடுதலை செய்யப்பட்டார்.
ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் கடந்த 1986 முதல் 1996 வரை தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உயர் அதிகாரியாக இருந்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.72.44 லட்சம் அளவுக்கு சொத்து சேர்த்ததாகக் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த சொத்துக்களை தன்னுடைய மனைவி உஷாதேவி, மகள் சித்ரா மற்றும் மருமகன் சுதிர் ஆகியோருடைய பெயர்களில் ஹரிபாஸ்கர் வாங்கியுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் குற்றம் சாட்டி அவர்கள் மீதும் வழக்குகள் தொடர்ந்தனர். இவை தொடர்பான ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான ஊழல் வழக்குகளை விசாரித்து வரும் இரண்டாவது தனி நீதிமன்றமே இந்த வழக்கையும் விசாரித்து வந்தது. முதலில் இந்த வழக்கை நீதிபதி தார்வேஸ் விசாரித்து வந்தார். அப்போது அரசுத் தரப்பில் 117 சாட்சிகளும் எதிர் தரப்பில் 8 சாட்சிகளும் ஆஜராகி சாட்சி அளித்தனர்.
இந் நிலையில் நீதிபதி தார்வேஸுக்குப் பதிலாக இரண்டாவது தனி நீதிமன்ற நீதிபதி ஆர். ராஜமாணிக்கம் இந்த வழக்கு விசாரணையைத் தொடர்ந்தார். கடந்த ஜூலை 30ம் தேதி இந்த விசாரணை முடிவடைந்தது. இதையடுத்து ராஜமாணிக்கம் இன்று தனது தீர்ப்பை வழங்கினார்.
ஹரிபாஸ்கர் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் மீது சுமத்தப்பட்ட இந்த ஊழல் குற்றச்சாட்டுக்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சரிவர நிரூபிக்கவில்லை என்பதால் அவர்களை விடுவிப்பதாக நீதிபதி ராஜமாணிக்கம் அறிவித்தார்.
அரசு தரப்பு ஆவணங்கள் தவறானதாக உள்ளன. அவற்றை இந்த நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவும் முடியாது என்று கூறிய நீதிபதி ராஜமாணிக்கம், இது தொடர்பாக அரசு தரப்பு வாதங்களையும் ஏற்க மறுத்து விட்டார். சுமார் ஒன்றரை மணி நேரம் (10.30 - 12.00 மணி) தீர்ப்பை வாசித்தார் அவர்.
இன்று தீர்ப்பு வழங்கப்பட்டதையொட்டி ஹரிபாஸ்கர், அவருடைய மனைவி, மகள் மற்றும் மருமகன் ஆகியோர் இன்று இரண்டாவது தனி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்கள். தீர்ப்பு வாசிக்கப்பட்டு முடியும் வரை கவலை தோய்ந்த முகத்துடன் நின்று கொண்டிருந்த ஹரிபாஸ்கர், தீர்ப்பு வழங்கப்பட்டவுடன் மிகவும் மகிழ்ச்சியுடன் தென்பட்டார்.
தமிழகத்தில் உள்ள 45,000 பஞ்சாயத்துக்களுக்கும் கலர் டி.விக்கள் வாங்கியதில் ரூ.10.16 கோடி வரை ஊழல் நடந்தது. அதிலும் ஹரிபாஸ்கருக்கு தொடர்புண்டு. இந்த வழக்கில் ஹரிபாஸ்கர் மற்றும் முன்னாள் அதிமுக அமைச்சர் செல்வகணபதி உள்ளிட்ட சிலருக்கு ஐந்து ஆண்டுகள் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த சிறை தண்டனையை எதிர்த்து செல்வகணபதியும் ஹரிபாஸ்கரும் மேல் முறையீடு செய்துள்ளதால் வெளியில் திரிந்து வருகின்றனர்.
மற்றொரு வழக்கான நிலக்கரி ஊழல் வழக்கில் ஹரிபாஸ்கர் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications