ரேஷன் கடைகளில் மலிவு விலை வேஷ்டி-சேலை விற்பனை: ஜெ. துவக்கி வைத்தார்
சென்னை:
கைத்தறி நெசவாளர்கள் சங்கங்களிலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட வேஷ்டி மற்றும் சேலைகளின் விற்பனையை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று துவக்கி வைத்தார்.
சென்னை-அசோக் நகரில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட ஒரு ரேஷன் கடையில் ஒரு வேஷ்டியையும் சேலையையும் பணம் கொடுத்து வாங்கி இந்த விற்பனையைத் துவக்கினார் ஜெயலலிதா.
கடுமையான வறுமை, பசி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஏழை நெசவாளர்களுக்கு கஞ்சித் தொட்டிகள் திறக்கப்பட்டன. தமிழக அரசு வழங்கி வந்த இலவச வேஷ்டி-சேலை திட்டம் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்தே நெசவாளர்களுக்கு இந்த அவல நிலை ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து ஏழை நெசவாளர்களுக்கு 20 கிலோ அரிசி வழங்க உத்தரவிட்ட ஜெயலலிதா, தமிழகம் முழுவதிலும் உள்ள கைத்தறி நெசவாளர் சங்கங்களில் தேங்கிக் கிடந்த வேஷ்டி மற்றும் சேலைகளைக் கொள்முதல் செய்ய ரூ.25 கோடியை ஒதுக்கினார்.
இவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட வேஷ்டிகளையும் சேலைகளையும் ரேஷன் கடைகள் மூலமாக மலிவு விலையில் விற்கப்படும் என்றும் ஜெயலலிதா அறிவித்தார். வேஷ்டியின் விலை ரூ.30 என்றும் சேலையின் விலை ரூ.40 என்றும் நிர்ணயிக்கப்பட்டது.
அதன்படி இன்று தமிழகம் முழுவதிலும் உள்ள 45,000 ரேஷன் கடைகளில் மலிவு விலை கைத்தறி வேஷ்டிகள் மற்றும் சேலைகளின் விற்பனை தொடங்கியது.
சென்னையில் அசோக் நகரில் புதிதாகத் திறக்கப்பட்ட ரேஷன் கடையில் இன்று மலிவு விலை வேஷ்டி-சேலை விற்பனையை ஜெயலலிதா துவக்கி வைத்தார். அவர் ரூ.70 பணம் செலுத்தி ஒரு வேஷ்டியையும் சேலையையும் பெற்றுக் கொண்டார்.
அதே நேரத்திலேயே தமிழகத்தில் உள்ள மற்ற ரேஷன் கடைகளிலும் மலிவு விலை வேஷ்டி-சேலை விற்பனை தொடங்கியது.