ரணில் நிபந்தனைகளை நிராகரித்தார் சந்திரிகா
கொழும்பு:
தனது அதிகாரங்களைக் குறைக்க அரசு விதித்த நிபந்தனைகளை இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா நிராகரித்துவிட்டார்.
இலங்கையில் புலிகளுடன் பேச்சு நடத்தும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயின் திட்டத்துக்கு சந்திரிகா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவந்ததால் அவரது அதிகாரங்களைக் குறைக்க ரணில் முடிவு செய்தார்.
ஒரு பிரதமர் தலைமையில் அமைந்த ஆட்சி ஓராண்டு காலத்தை நிறைவேற்றிவிட்டால் அதன் பின்னர் அந்த ஆட்சியைக் கலைக்குமஅதிகாரத்தையும் அதிபரிடம் இருந்து பறிக்கவும் ரணில் திட்டமிட்டுள்ளார்.
இந்த அதிகாரக் குறைப்புக்கு சந்திரிகா ஒப்புக் கொள்ளாவிட்டால் விரைவில் இடைத் தேர்தல் நடத்தப் போவதாகவும் ரணில்மிரட்டியுள்ளார். கடந்த தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியில் இருந்து சந்திரிகாவின் கட்சி இன்னும் மீளவில்லை. இப்போது மீண்டும் தேர்தல்நடந்தால் அவரது கட்சி மேலும் பலமிழக்கும்.
ரணிலின் தேர்தல் மிரட்டலையடுத்து புலிகள் மீதான தடையை நீக்க சந்திரிகா ஒப்புக் கொண்டார்.
ஆனால், தனது அதிகாரங்களைக் குறைக்கும் திட்டத்துக்கு சந்திரிகா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு ரூபவாகினி தொலைக் காட்சி மூலம் அவர் ஆற்றிய உரையில்,
ரணில் விக்கிரமசிங்கேயின் 8 மாத ஆட்சியை நீக்கும் திட்டம் ஏதும் இல்லை. ஆனால், நாட்டைக் காக்க எனது பரவலான அனைத்துஅதிகாரங்களையும் பயன்படுத்தத் தயங்க மாட்டேன்.
இப்போதுள்ள நிலையில் சுய கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள விரும்புகிறேன். ஆனால், எதிர் காலத்தில் நாடு அபாயத்தைச்சந்திக்கும்போது நான் என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள மாட்டேன்.
எனது அதிகார வரம்பில் எந்த மாற்றத்தையும் அனுமதிக்க நான் தயாராக இல்லை. அதே நேரத்தில் எந்த சவாலையும் சந்திக்க நான் தயார்என்றார்.