த.மா.கா. அதிருப்தியாளர்களுக்கு ஆதரவு குவிகிறது
சென்னை:
காங்கிரசுடன் தங்கள் கட்சியை இணைப்பதற்கு 5 தமாகா எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும்நிலையில் மேலும் 3 தமாகா எம்.எல்.ஏக்களும் அவர்கள் பக்கம் சாயத் தொடங்கியுள்ளனர்.
இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து டாக்டர் குமாரதாஸ் ஏற்கனவே கட்சியை விட்டு தற்காலிகமாகநீக்கப்பட்டு விட்டார்.
ஈஸ்வரன் மற்றும் ஹக்கீம் ஆகிய எம்.எல்.ஏக்களுக்கு தமாகா தலைமை நோட்டீஸ் அனுப்பி விட்டு, மணி நாடார்என்ற எம்.எல்.ஏவை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
மற்றொரு அதிருப்தி எம்.எல்.ஏவான செ.கு. தமிழரசன் தமாகாவைச் சேர்ந்தவரே அல்ல. சைக்கிள் சின்னத்தில்போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளதால் அவர் மீது எப்படி நடவடிக்கை எடுப்பது என்று கட்சித் தலைமை யோசித்துவருகிறது.
காங்கிரசுடன் தமாகா இணைந்தாலும் தங்களை தமாகா எம்.எல்.ஏக்களாகவே கருத வேண்டும் என்று சபாநாயகர்காளிமுத்துவிடம் இந்த ஐந்து அதிருப்தி எம்.எல்.ஏக்களும் கடிதம் கொடுத்துள்ளனர்.
இது குறித்து விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என்று காளிமுத்து கூறியுள்ளார்.
இதற்கிடையே அதிருப்தி தமாகா எம்.எல்.ஏக்களின் பக்கம் மேலும் மூன்று எம்.எல்.ஏக்கள் சாயத்தொடங்கியுள்ளனர்.
கம்பம் எம்.எல்.ஏவான ராமச்சந்திரன், ரிஷிவந்தியம் எம்.எல்.ஏவான சிவராஜ் மற்றும் விருதுநகர் எம்.எல்.ஏவானதாமோதரன் ஆகியோர் தங்கள் அணியுடன் இணையவுள்ளனர் என்று ஐந்து அதிருப்தி எம்.எல்.ஏக்கள்கூறியுள்ளனர்.
ஆனாலும் எம்.எல்.ஏ. பதவி பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில் அந்த மூன்று எம்.எல்.ஏக்களும் இன்னும் ஒருமுடிவுக்கு வரவில்லை என்றும் கூறப்படுகிறது.
புதுவையிலும் எதிர்ப்பு:
இதற்கிடையே காங்கிரசுடனான இணைப்புக்கு சில பாண்டிச்சேரி தமாகாவினரும் எதிர்ப்பைக் காட்டத்தொடங்கியுள்ளனர்.
பாண்டிச்சேரி தமாகா தலைவரான தேனி ஜெயக்குமாரே இணைப்புக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தஆரம்பித்துள்ளார். நான் தொடர்ந்து தமாகா எம்.எல்.ஏவாகத் தான் நீடிப்பேன் என்றும் இது தொடர்பாக கட்சிமேலிடம் எந்த நடவடிக்கையையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளதாகவும் ஜெயக்குமார் இன்று நிருபர்களிடம்கூறினார்.
இணைப்பு சம்பந்தமாக எந்தவிதமான அறிவிப்பையும் இதுவரை தன்னிடம் கட்சித் தலைமை தெரிவிக்கவேஇல்லை. பாண்டிச்சேரி தமாகாவினரை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்றும் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.
தமாகாவும் காங்கிரசும் இணைந்து செயல்பட வேண்டும் என்று தான் மறைந்த தலைவர் மூப்பனார் கூறினாரே தவிர,காங்கிரசுடன் தமாகா இணைய வேண்டும் என்று சொல்லவே இல்லை என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.
பாண்டிச்சேரியின் மற்றொரு தமாகா எம்.எல்.ஏவான நமசிவாயம் தற்போதைய மாநில காங்கிரஸ் அரசில்அமைச்சராக உள்ளார் என்பதும் அவரும் இந்த இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார் என்பதும்குறிப்பிடத்தக்கது.