தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை: பா.ஜ.க.
கோயம்புத்தூர்:
தமிழகத்தில் மீண்டும் திமுக- பா.ஜ.க. இடையே கூட்டணி ஏற்பட இப்போதைக்கு வாய்ப்பில்லை என பா.ஜ.க. பொதுச்செயலாளரான அருண் ஜேட்லி கூறினார்.
இப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் திமுக இடம் பெற்றிருந்தாலும் மாநில அளவில் பா.ஜ.கவுடன் எந்தக் கூட்டணியும்இல்லை.
இரு கட்சிகளும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ஒருவரை ஒருவர் விமர்சித்து வருகின்றன. பா.ஜ.கவில் பிரதமர் வாஜ்பாய்கோஷ்டி திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தாலும் துணைப் பிரதமர் அத்வானி கோஷ்டி அதிமுகவை ஆதரிப்பதாகக் கருதப்படுகிறது.
இப்போது அத்வானியின் கை ஓங்கியிருப்பதால் பா.ஜ.க.- திமுக இடையிலான உறவு சிக்கலாகிக் கொண்டே உள்ளது.
இந் நிலையில் கோயம்புத்தூரில் நிருபர்களிடம் பேசிய ஜேட்லியிடம் தமிழகத்தில் திமுகவுடன் பா.ஜ.க. கூட்டணி சேருமா என்றுகேட்டபோது, முதலில் பதில் சொல்ல மறுத்தார். தொடர்ந்து நிருபர்கள் கேள்வி கேட்டபோது பதில் தந்தார். அவர் கூறியதாவது:
தமிழகத்தில் எங்கள் கட்சியின் பலத்தை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். கூட்டணிகள் குறித்து தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்வோம். தேசிய ஜனநாயக் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சி திமுக. மாநில அளவில் இரு கட்சிகளுக்கும் இடையேபிரச்சனை இருந்தாலும் மத்தியில் திமுகவை அரசு சார்ந்துள்ளது என்றார்.
மாநிலத்தில் மீண்டும் கூட்டணி உண்டா இல்லையா என்று நிருபர்கள் விடாப்பிடியாகக் கேள்வி கேட்க, இப்போது என்ன தேர்தலாவரப் போகிறது. இதில் மேற்கொண்டு ஏதும் விளக்க விரும்பவில்லை என்றார்.
மத்தியில் கூட்டணி ஆட்சியை வெற்றிகரமாக நடத்த முடியும் என்பதை பா.ஜ.க. நிரூபித்துள்ளது. மாநிலங்களிலும் கூட்டணியைவிரும்புகிறது. அதே நேரத்தில் எங்களைத் தொடர்ந்து பலப்படுத்திக் கொள்வோம்.
காவிரி விவகாரத்தைப் பொறுத்த வரை உச்ச நீதிமன்றத்தை அனைத்து மாநிலங்களும் மதித்து நடக்க வேண்டும். இருக்கும் நீரைஇரு மாநிலங்களும் சமமாகப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications