நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் இந்தியாவில் ஊடுருவ முயற்சி
காஷ்மீர்:
நேற்று இரவு முதல் பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் ஊடுருவும் முயற்சியில் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் ஈடுபட்டுள்ளனர்.அவர்களை ராணுவமும் பாதுகாப்புப் படையினரும் வழிமறித்து தாக்கி வருகின்றனர்.
பாகிஸ்தானையும், தீவிரவாதிகளையும் மீறி காஷ்மீரில் தேர்தல் அமைதியாக நடந்து வருகிறது. இன்றும் 6 தொகுதிகளுக்கு மட்டுமேவாக்குப் பதிவு மிச்சம் உள்ளது. மாநிலத்தின் பிற பகுதிகளில் நடந்து முடிந்துவிட்ட தேர்தலில் சுமார் 42 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதனால் தேர்தலே நடத்த விடாமல் தடுக்கும் தனது முயற்சிகளில் தோல்வியடைந்துவிட்ட பாகிஸ்தான் தீவிரவாதத்தை தூண்டிவிட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகவே காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதல் பல மடங்கு அதிகரித்துவிட்டது.
இந் நிலையில் நேற்று இரவில் இருந்து பாகிஸ்தானைச் சேர்ந்த பல்வேறு தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த கும்பல்கள் கூட்டம் கூட்டமாகஇந்தியாவுக்குள் ஊடுருவும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
எல்லை நெடுகிலும் இந்த முயற்சி நடந்து வருகிறது. இதை முறியடிக்க ஆயிரக்கணக்கான படையினர் எல்லைப் பகுதிக்கு விரைந்துள்ளனர்.தேர்தலுக்காக மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்பட்ட படையினர் மீண்டும் எல்லைக்கு விரைந்துள்ளனர்.
ஜம்மூவில் பாலாகோட் பகுதியில் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 20க்கும் மேற்பட்ட ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகளை இந்தியராணுவம் வழிமறித்தது. அவர்களை சுற்றி வளைத்த ராணுவத்தினர் உடனே சரணையுமாறு எச்சரித்தனர். ஆனால், அவர்கள் ராணுவத்தினர்மீது குண்டுகளை வீசித் தாக்கிவிட்டு தப்பியோடினர்.
இதையடுத்து அவர்களை விரட்டிச் சென்று பாகிஸ்தான் எல்லையில் வைத்து அவர்களை ராணுவம் சுட்டது. இதில் 8 தீவிரவாதிகள்இறந்தனர். மற்றவர்கள் எல்லையில் இருந்தவண்ணம் இந்தியப் படைகளுடன் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.
காலை 5 மணிக்கு ஆரம்பித்த இந்தச் சண்டை பிற்பகல் வரை தொடர்ந்து கொண்டுள்ளது.
அதே போல பூஞ்ச் மாவட்டத்தில் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 4 தீவிரவாதிகளை ராணுவ வீரர்கள் அடர்ந்த காட்டுப் பகுதியில்சுட்டுக் கொன்றனர்.
இதற்கிடையே கத்துவா மாவட்டத்தில் நேற்று பயணிகள் பேருந்து மீது தாக்குதல் நடத்தி 8 பேரைக் கொன்ற 2 தீவிரவாதிகளை காஷ்மீர்போலீசார் சுட்டுக் கொன்றனர். அவர்களை காட்டுப் பகுதியில் நேற்றிரவு சுற்றி வளைத்த போலீசாரை நோக்கி தீவிரவாதிகள் சுட்டனர்.
இரவில் இருந்து காலை வரை இந்தச் சண்டை நீடித்தது. இதில் 2 தீவிரவாதிகளும் காலையில் கொல்லப்பட்டனர். அப்போது நடந்த கடும்சண்டையில் கத்துவா மாவட்ட டி.எஸ்.பி. கொல்லப்பட்டார். 2 போலீசாரும் காயமடைந்தனர்.
கொல்லப்பட்ட 2 தீவிரவாதிகளும் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பினர் என்று தெரியவந்துள்ளது.
இதற்கிடையே நேற்று இந்த பஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து இன்று ஜம்மூவில் பந்த் நடந்து வருகிறது.
அதே போல குப்வாரா பகுதியில் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற ஹர்கத்-உல்-முகாஜிதீன் பிரிவைச் சேர்ந்த 2 தீவிரவாதிகளையும்ராணுவம் சுட்டு வீழ்த்தியது.
இந் நிலையில் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் வைத்த கண்ணி வெடியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் வாகனம் சிக்கியது.இதில் அந்த வேன் வெடித்துச் சிதறியது. இச் சம்பவத்தில் வேனில் இருந்த 5 படையினர் படுகாயமடைந்தனர்.
இவ்வாறு எல்லையில் பல பகுதிகளிலும் இந்தியாவுக்கும் ஊடுருவும் முயற்சியில் தீவிரவாதிகள் தொடர்ந்து முயன்று வருகின்றனர்.












Click it and Unblock the Notifications