தமிழகத்திற்கு உடனடியாக 63 டி.எம்.சி. நீர் தேவை: கண்காணிப்புக் குழு அறிக்கை
டெல்லி:
தமிழகத்தில் கடுமையான வறட்சி தாண்டவமாடுவதால் காவிரி டெல்டா பகுதிகளில் 11 லட்சம் ஏக்கரில்பயிரிடப்பட்டுள்ள பயிர்களைக் காப்பாற்ற 63 டி.எம்.சி. நீர் உடனடியாகத் தேவைப்படுகிறது என்று உச்சநீதிமன்றத்தில் காவிரி கண்காணிப்புக் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
கடந்த வாரம் கர்நாடகத்திலும் கடந்த 1 மற்றும் 2ம் தேதிகளில் தமிழகத்திலும் உள்ள அணைகளைப் பார்வையிட்டகாவிரி கண்காணிப்புக் குழுவினர் நேற்று காவிரி நதி நீர் ஆணையத்தின் தலைவரான பிரதமர் வாஜ்பாயிடம்அறிக்கை தாக்கல் செய்தனர்.
மத்திய நீர்வளத்துறை செயலர் கோஸ்வாமி தலைமையிலான இந்தக் குழுவினர் நேற்று உச்ச நீதிமன்றத்திலும் இதுதொடர்பாக 25 பக்க அறிக்கையைத் தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையின் விவரம்:
தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள பயிர்களைக் காப்பாற்ற அக்டோபர் இறுதிக்குள் கர்நாடகஅணைகளிலிருந்தோ பருவமழை மூலமாகவோ 63 டி.எம்.சி. நீர் கட்டாயம் தேவைப்படுகிறது.
ஆனால் மேட்டூர் அணையிலோ தற்போது 13 டி.எம்.சி. நீர் மட்டுமே உள்ளது.
கடந்த ஜூன் முதல் ஆகஸ்டு மாதம் வரை கர்நாடகம் காவிரியில் நீர் திறந்துவிட மறுத்து விட்டதால் தமிழகத்தில்குறுவை சாகுபடி முழுமையாகப் பாதிக்கப்பட்டதாகத் தமிழக விவசாயிகள் கூறினார்கள்.
சுமார் 11 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிரைக் காப்பாற்ற உடனடியாக நீர் தேவைப்படுகிறதுஎன்றும் இல்லாவிட்டால் சம்பா சாகுபடியும் முழுமையாகப் பாதிக்கப்படும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.
அக்டோபர் இறுதிக்குள் பருவமழை மூலமாகவோ அல்லது கர்நாடக அணைகள் மூலமாகவோ 63 டி.எம்.சி. நீர்கிடைத்தால் தான் 11 லட்சம் ஏக்கர் பயிர்களையும் காப்பாற்ற முடியும்.
இதைத் தவிர தமிழகத்தில் குடிநீர் பிரச்சனையைத் தீர்க்கவும் சுமார் 10 டி.எம்.சி. நீர் தேவைப்படுகிறது.
இந்நிலையில் நான்கு கர்நாடக அணைகளில் தற்போது 40 டி.எம்.சி. நீர் உள்ளது. அங்குள்ள காவிரி பாசனப்பகுதிகளில் அடுத்த ஆண்டு மே மாதம் வரையிலான சாகுபடிக்கு மொத்தம் 93 டி.எம்.சி. நீர் தேவைப்படுகிறது.
எதிர்காலச் சாகுபடியில் அரிசிக்குப் பதிலாக பருப்பு சாகுபடி செய்யுமாறு மாற்று ஏற்பாடுகளைச் செய்யகர்நாடகத்திற்கு கண்காணிப்புக் குழு பரிந்துரை செய்துள்ளது.
ஆனால் தமிழகத்திற்கு அப்படிப்பட்ட மாற்றுத் திட்டம் எதையும் தெரிவிக்கவில்லை. தமிழக விவசாயிகளுக்குஉடனடியாக 63 டி.எம்.சி. நீர் தேவை. மேற்கொண்டு தேவைப்படும் நீரை வடகிழக்குப் பருவமழை பூர்த்தி செய்துவிடும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஏற்கனவே தாக்கல் செய்துள்ள ஒரு மனுவில் தினசரி 2 டி.எம்.சி. நீர் தமிழகத்திற்குத் தேவை என்றுதெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்திற்கு உடனடியாக 63 டி.எம்.சி. நீர் தேவை என்று கண்காணிப்புக் குழுகூறியுள்ளதன் மூலம் தமிழகத்தின் கோரிக்கையில் நியாயம் உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கர்நாடக அரசு மீது தமிழக அரசு தொடர்ந்துள்ள அவமதிப்பு வழக்கு தொடர்பான விசாரணைஇன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது என்றுகர்நாடக முதல்வர் கிருஷ்ணா உள்ளிட்ட ஐந்து பேர் நேற்று பதில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications