நெய்வேலியை திணறடிப்போம்: சரத்குமார்
சென்னை:
நெய்வேலி முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொள்ள லட்சக்கணக்கான ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள் என்று நடிகர்சரத்குமார் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியை நடிகர்கள் சரத்குமாரும், நெப்போலியனும் நடிகர் சங்கம் சார்பில் சந்தித்தனர்.
பின்னர் செய்தியாளர்களுடன் அவர்கள் பேசுகையில், போராட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மொத்தம்7 குழுக்கள் அமைக்கப்பட்டு ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
போராட்டத்தின் பெயர் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்பதிலிருந்து மாற்றப்பட்டு கலையுலகின் காவிரிப் போராட்டம் என்றுமாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அனைத்து நடிகர்களின் ரசிகர் மன்றங்களைச் சேர்ந்த 5 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் நெய்வேலியில் திரளவுள்ளனர். மிகப்பிரமாண்டமான முறையில், அமைதியான முறையில் எழுச்சியுடன் பேரணியில் பங்கேற்கவுள்ளனர்.
நெய்வேலி போராட்டத்திற்குப் பின் டெல்லி சென்று துணைப் பிரதமர் அத்வானியைச் சந்தித்துப் பேசவுள்ளேன். காவிரிப்பிரச்சினையில் நிரந்தரத் தீர்வு காண்பது தொடர்பாக நாடாளுமன்றத்திலும் பேசுவேன்.
கலையுலகப் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்த முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட அனைவருக்கும்எங்களது நன்றிகள் என்றார் சரத்குமார்.