பந்த்: நாளை காலை 6 மணி முதல் ரயில்கள் ரத்து
சென்னை:
தமிழகத்தில் நாளை (புதன்கிழமை) நடக்கும் பொது வேலை நிறுத்தத்தையொட்டி காலை 6 மணி முதல் மாலை 6மணி வரை எந்த ரயிலும் ஓடாது என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து துணைப் பொதுமேலாளர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை தமிழகத்தில் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னைக்கு காலை 6 மணிக்கு மேல் வரும் ரயில்கள் அனைத்தும் அதற்கு முன்பாகவே முக்கிய ரயில்நிலையங்களில் நிறுத்தப்பட்டு விடும். மாலை 6 மணிக்கு மேல் தான் வழக்கமான போக்குவரத்து தொடங்கும்.
முழு அடைப்பின்போது ரயில் தண்டவாளங்களில் ரோந்து பலப்படுத்தப்படும். ரயில் நிலையங்களிலும் பாதுகாப்புபலப்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.
நம் ஊரில் எந்த ரயிலும் சொன்ன நேரத்துக்கு ஊர் போய் சேர்ந்தது இல்லை. இதனால் இன்று இரவு புறப்படும்நீண்ட தூர ரயில்களில் பிரயாணம் செய்வதை பயணிகள் தவிர்த்துவிடுவது நல்லது.
அதே போல காலையில் ஊர் போய் சேரும் நீண்ட தூர பஸ் பயணத்தையும் தவிர்ப்பது நல்லது.
இடையில் மாட்டி சிரமப்பட நேரிடலாம் என்பதால் குறிப்பாக சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கும், தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் செல்லும் ரயில்களை முடிந்தவரை தவிருங்கள். அதே போல பெங்களூரில் இருந்துதூத்துக்குடி, சென்னை செல்லும் ரயில்களையும் தவிர்த்து விடுங்கள்.
இந்த ரயில்கள் சராசரியாக காலை 7 மணிக்குத் தான் அந்தந்த ஊர்களைச் சென்றடையும். ஆனால், பந்த் 6 மணிக்கேஆரம்பித்துவிடுவதால் ரயில்கள் முன்னதாகவே நின்றுவிடும்.