குழந்தை புதைப்பு விழாவுக்கு போலீஸ் தடை
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பாலையூர் கிராமத்தில் குழந்தைகளை உயிருடன் புதைத்து நேர்த்திக்கடனை செலுத்தும் விழாவுக்கு போலீஸார் தடை விதித்தனர்.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே நடந்த சிறுமிகள் புதைப்பு திருவிழாவின் பயங்கரமே இன்னும் மறையாதநிலையில் அதேபோன்ற ஒரு நிகழ்ச்சி சாத்தூர் அருகே உள்ள பாலையூர் கிராமத்தில் நடக்க இருந்தது.
ஆனால் போலீஸார் தக்க சமயத்தில் தலையிட்டு இந்த நிகழ்ச்சிக்கு தடை விதித்தனர்.
பாலையூர் கிராமத்தில் உள்ள முத்தாளம்மன் கோவிலில் இரண்டு நாள் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமைதொடங்கியது.
விழாவின் முக்கிய அம்சமாக, நேர்த்திக் கடனுக்காக குழந்தைகளை உயிருடன் மண்ணில் புதைத்து எடுக்கும்நிகழ்ச்சி நடக்கவிருந்தது. இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸாரும், நகராட்சி நிர்வாகிகள் விரைந்து வந்து கிராம மக்களுக்கு எடுத்துக் கூறி குழந்தைபுதைப்பு நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என்று வலியுறுத்தினர்.
நீண்ட நேர விவாதத்திற்குப் பிறகு குழந்தை புதைப்பு நிகழ்ச்சி இல்லாமலேயே விழா நடந்து முடிந்தது.