மதுரை கார்ப்பரேஷன் ஊழியருக்கு கவுன்சிலர் விட்ட "பளார்"
மதுரை:
மதுரை கார்ப்பரேஷன் ஊழியர் ஒருவரை ஒரு கவுன்சிலர் கன்னத்தில் அறைந்ததைத் தொடர்ந்து கார்ப்பரேஷன்ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
மதுரை கார்ப்பரேஷன் வடக்குப் பிரிவில் பணிபுரிந்து வரும் அலுவலக உதவியாளர் ஒருவரை நேற்று இரவு ஒருகவுன்சிலர் டெலிபோனில் அழைத்து குப்பைத் தொட்டியை அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார்.
ஆனால் அதற்கு அந்த ஊழியர் சரியாகப் பதில் சொல்லாமல், இப்போதெல்லாம் வர முடியாது என்கிறதோரணையில் அலட்சியமாகப் பதில் கூறிவிட்டு போனை வைத்து விட்டார்.
இதனால் கடுப்பாகிப் போன அந்தக் கவுன்சிலர் இன்று காலை கார்ப்பரேஷன் அலுவலகத்திற்கு வந்து,சம்பந்தப்பட்ட ஊழியரைக் கடுமையாகத் திட்டினார்.
பதிலுக்கு அந்த ஊழியரும் கவுன்சிலரை மோசமாகத் திட்ட ஆரம்பிக்கவே இருவருக்கும் இடையில் வாய்ச்சண்டை வலுத்தது.
அப்போது திடீரென்று அந்த ஊழியரை கவுன்சிலர் பளாரென்று கன்னத்தில் அறைந்து விட்டுப் போய்விட்டார்.
அதிர்ச்சி அடைந்த அந்த ஊழியர் மற்ற ஊழியர்களிடம் நடந்ததைக் கூறினார். இதையடுத்து மதுரைகார்ப்பரேஷனின் கிழக்குப் பிரிவு ஊழியர்கள் அனைவரும் ஒன்றாக அந்த அலுவலகத்தின் முன் திரண்டனர்.
சம்பந்தப்பட்ட கவுன்சிலர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் பணிக்குத் திரும்ப மாட்டோம்என்று அவர்கள் கூறிப் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து அந்தக் கவுன்சிலர் மீது அதிகாரிகள் ஒரு வழக்கைப் பதிவு செய்தனர். அதன் பிறகே ஊழியர்களும்தங்கள் பணிக்குத் திரும்பினர்.
மதுரை கார்ப்பரேஷன் அலுவலகத்தில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாகப்போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.