காவிரியை வைத்து அரசியல் பிழைப்பா?: ரஜினிக்கு பன்னீர் சூடு
சென்னை:
காவிரியை வைத்து அரசியல் பிழைப்பு நடத்த ரஜினி முயல்வதாக பொதுப்பணித்துறை அமைச்சர் பன்னீர் செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.
கங்கை- காவிரி இணைப்பு குறித்து என்ஜினியர்களுடன் பேசி வருவதாகவும் முதல்வர்களுடன் பேசி வருவதாகவும் தமிழக முதல்வர்ஜெயலலிதாவை சந்திக்கப் போவதாகவும் மக்கள் இயக்கத்தை ஆரம்பிக்கப் போவதாகவும் ரஜினிகாந்த் கூறியிருந்தார்.
இந் நிலையில் ரஜினிக்கு பதில் தந்து பன்னீர்செல்வம் மூலமாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
மக்கள் இயக்கத்தை ஆரம்பித்து நதிகளை இணைக்கப் போவதாகக் கூறியுள்ளதன் மூலம் ஏதோ இவர் தான் நாட்டிலேயே முதல்முறையாகஇந்த யோசானையைக் கூறியவர் மாதிரி நாடகமாடுகிறார் ரஜினி.
இதன்மூலம் இவர் தான் ஏதோ மிகப் பெரிய தொலைநோக்குப் பார்வை கொண்டவர் மாதிரியும் நாட்டிலுள்ள மற்ற அரசியல் தலைவர்கள்எல்லாம் தெளிவான பார்வை இல்லாதவர்கள் என்பது மாதிரியும் காட்ட நினைக்கிறார்.
இது போன்ற செயல்கள் மூலம் அரசியல் சார்பற்ற பெருந்தலைவராக உருவெடுத்துவிடலாம் என்றும் கனவு காண்கிறார் ரஜினி.
1982ம் ஆண்டில் நதிகளை இணைக்க மத்திய அரசிடம் வாதாடினார் எம்.ஜி.ஆர். அவரது தொடர்ந்த நெருக்குதல் காரணமாகத் தான்அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தேசிய நீர் வள மேம்பாட்டுக் கழகத்தை நிறுவினார்.
இமாலத்தில் உருவாகும் நதிகளுடன் தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும் என்ற எம்.ஜி.ஆரின் கோரிக்கை குறித்து ஆராய அந்தகழகத்துக்கு உத்தரவிடப்பட்டது. இது போன்ற உண்மைகள் ரஜினி போன்றவர்களுக்கு தெரியாமல் போனதில் அதிசயம் ஏதுமில்லை.
இந்த நீர் வள மேம்பாட்டுக் கழகம் தென்னிந்திய நதிகளை இணைப்பது குறித்து ஆய்வு நடத்தி இத் திட்டம் சாத்தியமா என்பது குறித்துமத்திய அரசிடம் அறிக்கையும் தந்தது.
இத் திட்டத்தை நிறைவேற்றுமாறு மத்திய அரசை தமிழகம் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளது.
1984ம் ஆண்டிலேயே இந்த விவகாரத்தை ராஜ்யசபாவில் கிளப்பினார் முதல்வர் ஜெயலலிதா.
ஆனால், கடந்த 20 ஆண்டுகளில் என்ன நடந்தது என்பது கூடத் தெரியாத ரஜினி திடீரென முழித்துக் கொண்டது மாதிரி பிதற்றுகிறார்.
அரசியவாதிகளால் தேர்தலைத் தவிர வேறு எது குறித்தும் யோசிக்கவே முடியாது என்பது மாதிரியும், ஏதோ இவர் தான் மக்களுக்காகஉழைக்கும் ஒரே ஆசாமி மாதிரியும் தன்னைக் காட்டிக் கொள்ள முயல்கிறார்.
தனக்கு விளம்பரம் தேடிக் கொள்வதற்காக இது போன்ற அரசியல் ஸ்டன்ட்களை நடத்திக் காட்டிக் கொண்டிருக்கிறார் ரஜினி. இது அவரதுஅறியாமையைத் தான் காட்டுகிறது. இதன் மூலம் காவிரியை வைத்து அரசியல் பிழைப்பு நடத்த ரஜினி முயல்வதுவெட்டவெளிச்சமாகிவிட்டது.
அடிக்கடி இமயமலைக்குச் சென்று வருவதாலோ என்னவோ ரஜினியின் செயல்களில் எப்போதும் இமாயலத் தவறுகள் தான் உள்ளன.
இவ்வாறு ரஜினியை கிண்டலடித்துள்ளார் பன்னீர்செல்வம்.