தமிழகத்தில் மிக பலத்த மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
சென்னை:
தமிழகம் முழுவதும் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது.
வடகிழக்குப் பருவ மழை சில வாரங்களுக்கு முன் தொடங்கியது. இந் நிலையில் மன்னார் வளைகுடாவில் இருந்து வங்கக் கடலின் தென்கிழக்குப் பகுதி வரை காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாயி உள்ளால் மழை தீவிரமாகியுள்ளது.
தமிழகத்திலேயே அதிகபட்சமாக மயிலாடுதுறையில் 31 செ.மி. மழை பெய்துள்ளது. புதுக்கோட்டையில் 21 செ.மீயும் மழை பெய்துள்ளது.தஞ்சை, நாகை உள்ளிட்ட காவிரி பாசனப் பகுதிகளிலும், மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும், சென்னை நகரிலும் மிக பலத்த மழைபெய்து வருகிறது.
தமிழகம் முழுவதும் அடுத்த 48 மணி நேரத்துக்கு தொடரும் என நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
பாபநாசம், மணிமுத்தாறு, சென்னை புழல் ஏரி, சேர்வலாறு உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு அணைக்கட்டுகள், ஏரிகளிலும் நீர் நிரம்பிவருகிறது.
சென்னையில் கடும் மழை காரணமாக சாலைகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தண்டவாளங்களும்நீரில் மூழ்கிவிட்டதால் மின்சார ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
நகரின தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாநகராட்சி இடம் மாற்றி வருகிறது.இதுவரை 1 லட்சம் பேர் பள்ளிகளிலும், கல்யாண மண்டபங்களிலும் இடம் பெயர்ந்துள்ளனர்.
பலத்த மழையில் சென்னை அண்ணாசாலையில் ஒரு பழைய கட்டடம் இடிந்ததில் நேற்றிரவு இரண்டு பேர் பலியாயினர். சென்னையில்மட்டும் சராசரியாக கடந்த ஒரு நாளில் 18 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
இதே போல தமிழகத்தின் பிற பகுதிகளிலும் மிக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், கடந்த ஓராண்டாக தமிழகத்தை வாட்டிய வறட்சிமுடிவுக்கு வரும் என்று நம்பப்படுகிறது.
கர்நாடகம் கைவிட்டாலும் நாகை, திருச்சி. தஞ்சாவூர் மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருவதால் விவசாயிகள் பெரும்மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். சம்பா நாற்றை நட ஆரம்பித்துள்ளனர்.
இந்த மழையிலான மாநிலம் முழுவதுமே தீபாவளி விற்பனை மந்தமடைந்துள்ளது.
மேட்டூர் நிலைமை:
கடும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கும் நீர் வரத்து மிகவும் அதிகமாகியுள்ளது. கர்நாடகத்தில் இருந்தும் வினாடிக்கு 42,000 கன அடிநீர் வந்து கொண்டுள்ளது. இது தவிர தமிழகத்தில் பெய்யும் கன மழை காரணமாக நீர் வரத்து கூடியுள்ளது.
கடந்த செப்டம்பர் முதல் தமிழகத்துக்கு கர்நாடகம் 47 டி.எம்.சி. நீரைத் தந்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை பல தடைகளுக்குப் பின்னர்26 டி.எம்.சி தான் வந்து சேர்ந்துள்ளது.
இப்போது நீதிமன்றத்திடம் இருந்து தப்ப கடந்த 4 நாட்களாக எவ்வளவு அதிக நீரை விட முடியுமோ அவ்வளவு நீரை கர்நாடகம் விட்டுவருகிறது. 4 நாட்களில் மட்டும் 4 டி.எம்.சி. நீர் தமிழகத்துக்கு வந்து சேர்ந்துவிட்டது.
இந்த நீரை பொதுப் பணித்துறை சேமித்து வைத்து வருகிறது. அணையில் இருந்து 1000 கன அடி நீர் மட்டுமே காவிரிப் பாசனதுக்குதிறந்துவிடப்படுகிறது.
இப்போது பெய்துள்ள மழையே நாற்று நட போதுமானதாக இருப்பதால் நீரை திறந்துவிடாமல் இருப்பதாக பொதுப்பணித்துறை செயல்தலைமைப் பொறியாளர் சுப்பிரமணியம் தெரிவித்தார். மழை நின்றுவிட்டால் சம்பா பயிரைக் காப்பாற்ற மேட்டூரில் இருந்து நீர் விடப்படும்என்றார்.